மீன்பிடி படகோடு தண்ணீரில் மூழ்கி ஜல சமாதியான 4 தமிழக மீனவர்கள் சடலமாக மீட்பு
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது படகுடன் மாயமான மீனவர்கள் நான்கு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது படகுடன் மாயமான மீனவர்கள் நான்கு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து ஜனவரி18 ஆம் தேதியன்று 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகும் சென்றது.
அந்த படகில் மெசியா,30, த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம், நாகராஜ், 52, த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி,
சாம், 28, த/பெ நேச பெருமாள், மண்டபம், செந்தில்குமார் 32, த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு மீனவர்களும் சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையின் ரோந்து படகுகள் படகு மீது முட்டி மோதின. இதில் தமிழக மீனவர்களின் படகு மூழ்கத் தொடங்கி விட்டது என்று, அந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். சில மணி நேரங்களில் அவர்களிடம் இருந்து, எந்தத் தகவலும் இல்லை.
ஜனவரி 19ஆம் தேதி காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், நேற்றுவரைக்கும் கரை திரும்பவில்லை. இதனையடுத்து விசைப்படகைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றனர். காணாமல் போன மீனவர் குடும்பங்கள் கண்ணீரில் தவித்தனர்.
நால்வரும் பாதுகாப்பாக இருப்பதாக இலங்கை கடற்படையினர் கூறியதாக தகவல் வெளியான நிலையில் இரண்டு மீனவர்களின் உடல்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டது. இன்று காலையில் மேலும் இரண்டு பேரின் உடல்கள் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேசன் துறை கடற்பரப்பில் இருந்து தமிழக மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீனவர்கள் இந்திய எல்லை பகுதிக்கு சென்று விட்டதாக இலங்கை கடற்படையினர் கூறிய நிலையில் இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.