அமித்ஷா கேட்ட அந்த ஒரு கேள்வி.. உற்சாகத்தில் ஆரவாரம் செய்த பாஜகவினர்
காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார் என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
Recommended Video
ராமநாதபுரம்: ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் அமித்ஷா.. சுற்றியிருந்த பாஜக தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து விட்டனர்.
அதிமுக தலைமையில், பாஜக கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணவிருக்கின்றனர். இதனையொட்டி, தமிழகத்தில் முதன்முதலாக தேர்தல் பணிகளை துவக்கி தொண்டர்களை உற்சாகப்படுத்த அமித்ஷா ராமநாதபுரம் வந்திருந்தார்.
அத்துடன் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது, "தமிழகத்தில் ஒரு சில பத்திரிகைகள் பாஜக கூட்டணி 4 அல்லது 5 இடங்களில் தான் வெற்றி பெறுமென எழுதுகின்றனர்.
ஆனால் இந்த கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது தமிழகத்திற்கு செய்ததை விட இப்போது பாஜக ஆட்சியில் 5 மடங்கு தமிழகத்திற்கு நன்மைகளை செய்து வருகிறோம்" என்றார்.
மீண்டும் அமித்ஷா பேசும்போது, "எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று அறிவித்துவிட்டு தேர்தல் களம் காண்கிறோம். ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? ஏன் இன்னும் அறிவிக்கவில்லை? யாரை அறிவிக்க போகிறார்கள் ? ராகுலா? சந்திரபாபு நாயுடுவா ? மம்தா பானர்ஜியா? அகிலேஷ் யாதவா? மாயாவதியா? ஸ்டாலினா? என யாருக்குமே தெரியாது. யாரை அறிவிக்கப் போகிறார்கள்?" என்று கிண்டலடித்து பேசியதும், சுற்றியிருந்த பாஜகவினர் ஆரவாரத்துடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.