முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..!
ராமநாதபுரம்: முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சியையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.
கடந்த மார்ச் மாதம் முதல் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்த தினகரன், முதல் நிகழ்ச்சியாக இதில் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே தினகரனை வரவேற்பதற்காக அங்கு பெருமளவில் அமமுகவினர் திரண்டிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கம் தேவர் நினைவிடத்தை நோக்கி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை வரை அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கி தந்துள்ளதால் அந்தந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
அமமுக தொண்டர்கள்
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பசும்பொன் வந்து சென்ற பின்னர் டிடிவி தினகரன் அங்கே சென்று சேர்ந்தார். புதுச்சேரியில் இருந்து தனது கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் வந்த அவருக்கு அமமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அன்னதானம்
கடந்த ஆண்டுகளில் திறந்த வேனில் நின்றுகொண்டு அங்கிருக்கும் சமுதாய அமைப்பினர் மற்றும் கட்சியினரை பார்த்து கையசைத்தவாறு இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டே தேவர் நினைவிடத்திற்கு செல்வார் டிடிவி தினகரன். அங்கு நெல்லையை சேர்ந்த மூர்த்தி தேவர் ஏற்பாடு செய்யும் அன்னதானம் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைப்பார்.
கட்சியினர் ஆஜர்
ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பசும்பொன் நிகழ்ச்சியை விரைந்து முடித்துக்கொண்டு புறப்பட்டார் டிடிவி தினகரன். பல மாதங்களுக்கு பிறகு டிடிவி தினகரன் பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சி என்பதால் தென் மாவட்டங்களை சேர்ந்த மொத்த அதிமுகவினரும் பசும்பொன்னில் அவர் கண்ணில் படவேண்டி ஆஜராகியிருந்தனர். அங்கு யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் வரவில்லை என்பதை தினகரனும் கவனிக்கத் தவறவில்லை.