அப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி
ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 4வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில், பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ், டிஆர்டிஓ விஞ்ஞானிகளும் அஞ்சலி செலுத்தி திரும்பியதை பார்க்க முடிந்தது. கலாம் தேசிய நினைவகத்தில் காலை 9 மணியளவில் அப்துல் கலாமின் அண்ணன் முத்து மீரா மரைக்காயர், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினரும், ஜமாத்தினரும், அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டமும் நடத்தப்பட்டது. அப்துல் கலாம் சமாதி முன்பு குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுன்டேசன் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவாடானை சட்டசபை உறுப்பினர் கருணாஸ், அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள்.