பாம்பன் பாலத்தில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசுக்கு மிரட்டல் வந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசுக்கு மிரட்டல் வந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. ஐஎஸ் அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்தியது.
இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்தியா இலங்கை எல்லையிலும் பாதுகாப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசுக்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனால் ரயில்வே பாலம், பாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகிறார்கள். எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 1 மணி நேரமாக அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.
இதில் என்ன இருக்கிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.