இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை கடந்து செல்லும் புரேவி புயல்.. வானிலை மையம் தகவல்
புரேவி புயலால் தென் தமிழகத்தில் மழை பொழிந்து வருகிறது
ராமேஸ்வரம்: இன்னும் 3 மணி நேரத்தில் புரேவி புயல் பாம்பன் பகுதியை முழுவதும் கடந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரேவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
திரிகோணமலையில் கரையை கடந்த இந்த புரேவி புயல், பாம்பன்- குமரி இடையே இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், புரேவி புயல் தற்போது எங்குள்ளது என்பது உட்பட சில தகவல்களை தெரிவித்தள்ளது. இந்த புயல் அடுத்த 3மணி நேரத்தில் பாம்பன் பகுதியை முழுவதும் கடந்து செல்லும் என்று கூறியுள்ளது.. இப்போதைக்கு காற்றின் வேகம் 70-80 கி.மீ வேகத்தில் வீசுவதாகவும், 90கி.மீ வேகத்தில் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இந்திய வானிலை ஆய்வு மையம் இதே தகவலை உறுதி செய்துள்ளது. மலாய் தீபகற்பம் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
என்னங்க இது.. முத்துப்பேட்டை, காரைக்குடி, மதுரை... இப்படி தமிழகத்துக்குள் டூர் போகும் புரேவி புயல்!
ஏற்கெனவே நிவர், புரேவி என்று இரு புயல்கள் அடுத்தடுத்து தாக்கி உள்ள நிலையில், இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளது மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. காரணம், வழக்கமாக, தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தம் உருவானால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்பதுடன் புயலாக மாறினால் பலத்த சேதத்தையும் விளைவிக்கும் என்பதால்தான் இந்த கலக்கமும் சூழ்ந்துள்ளது. எனினும், இதையெல்லாம் அறிந்துதான், ஏற்கனவே அரசு முன்னெச்சரிக்கையை தமிழகம் முழுவதும் கையில் எடுத்துள்ளது நம்பிக்கையை தந்து வருகிறது.