வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி.. ராமநாதபுரத்தில் உடல் நல்லடக்கம்.. கண்ணீரோடு விடை தந்த மக்கள்!
ராமநாதபுரம்: லடாக் எல்லையில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
Recommended Video
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் தொடர்ந்து பிரச்னை அதிகரித்து வருகிறது. அங்கு இரண்டு நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஒருவரும் மரணம் அடைந்தார். ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி இந்த மோதலில் வீரமரணம் அடைந்தார்.
கோ சீனா கோ.. குஜராத், டெல்லி, உ.பியில் சீனாவிற்கு எதிராக வெடித்த போராட்டம்.. கோபத்தில் மக்கள்!
உடல் வந்தது
இதையடுத்து நேற்று முதல் நாள் இரவு அவரின் உடல் ராமநாதபுரம் கொண்டு வரப்பட்டது. நேற்று அவரின் உடல் மக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்கள் பெரும் திரளாக வந்து அவரின் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் லடாக் எல்லையில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பழனி
ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. ராணுவ மரியாதையுடன் இன்று அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பழனியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். கடுக்கலூர் கிராமத்தின் முதல் ராணுவ வீரர் பழனி என்பது குறிப்பிடத்தக்கது.
பலருக்கு உதாரணம்
அந்த கிராமத்தின் ரோல் மாடலாக இவர் பார்க்கப்பட்டார். தான் சொந்தமாக வீடு கட்டி அதில் குடியேறலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது, பழனி எல்லையில் வீரமரணம் அடைந்து உள்ளார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பழனியின் உடலுக்கு ராணுவ வீரர்கள் ராணுவ முறைப்படி மரியாதை செய்யப்பட்டது. பெட்டியில் வைக்கப்பட்ட அவரது உடலில், தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
மக்கள் கண்ணீர்
உடல் அடக்கம் செய்யப்பட்ட பின் அந்த தேசிய கொடி பழனியின் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஊர் மக்கள் பெருந்திரளான அளவில் இன்று பழனியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பழனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.