கச்சத்தீவு அருகே பிரமாண்ட காற்றாலை திட்டம்- சீனாவுக்கு அனுமதி கொடுத்த இலங்கை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே பிரமாண்ட காற்றாலை திட்டம் செயல்படுத்த சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு மிக அருகில் இந்த காற்றாலை திட்டத்தை சீனா செயல்படுத்த உள்ளது.
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இந்தியா- இலங்கை- ஜப்பான் மூன்று நாடுகளும் இணைந்து கையெழுத்திட்டன. ஆனால் இந்தியாவுக்கு இன்னமும் இந்த கொள்கலன் முனையத்தை இலங்கை வழங்கவில்லை.
சீனா ஆதரவு தொழிற்சங்கங்கள் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிடம் தர எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பாக்ஜசலந்தி பகுதியில் பிரமாண்டமான காற்றாலை திட்டத்தை செயல்படுத்த இலங்கை முடிவு செய்தது.
பாக்ஜலசந்தி பகுதியில் இத்தகைய திட்டத்தை இந்தியாவுக்கு தான் இலங்கை கொடுக்கும் என எதிர்பார்கப்பட்டது. ஆனால் தற்போது சீனா வசம் இந்த காற்றாலை திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானதாகவே பார்க்கப்படுகிறது. வங்க கடலில் கச்சத்தீவுக்கு மிக அருகே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையும் பறிபோகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.