விழாக்கோலத்தில் பசும்பொன்.. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை... இ.பி.எஸ், ஓ.பி.எஸ். மரியாதை
Recommended Video
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
அவர்களுடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வருகையால் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
குருபூஜை
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றி வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் வந்து செல்கின்றனர்.
தேவர் நினைவிடம்
அதிமுக சார்பில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் பசும்பொன் கிராமத்திற்கு வந்திருந்தனர். தேவர் நினைவிடத்தில் மாலைகளை வைத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை செலுத்தினர்.
புறப்பட்டனர்
பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அஞ்சலி செலுத்தியே பிறகே மற்ற கட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 9.30 மணிக்கு மரியாதை செலுத்த வந்த ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து 9.48-க்கு புறப்பட்டனர். சரியாக 18 நிமிடம் இருந்துவிட்டு அடுத்தக் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த வழிவிட்டு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டனர்.
மாலை அணிவிப்பு
பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் பங்கேற்பு
இதனிடையே சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், நிலோபர் கபில், வளர்மதி, செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.