வலுவிழந்த புரேவி புயல்.. காற்றின் வேகம் குறையும்.. ஆனாலும் கனமழை உண்டு.. அமைச்சர்
தென்காசி: புரேவி புயல் பாம்பனில் மையம் கொண்ட போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
வங்கக் கடலில் உருவான புரேவி புயல் இலங்கை திருகோணமலை- பருத்தித் துறைக்கு இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு கரையை கடந்தது. இந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது பாம்பன் அருகே வந்துள்ள நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பன் - கன்னியாகுமரி இடையே பாம்பன் அருகே நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
புரேவி புயல் பாம்பனிலிருந்து கிழக்கு- தென்கிழக்கில் 20 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த புரேவி புயல் வலுவிழந்ததாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
புரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
இதுகுறித்து தென்காசியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறுகையில் புரேவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் காற்றின் வேகம் குறையும் ஆனால் தென் தமிழகத்திற்கு கனமழை பெய்யும்.
இதனால் மக்கள் அரசின் அறிவுரைகளை கேட்டு செயல்படுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.