அத்தனை அரசியல்வாதிகளும் இவரைச் சுற்றி.. பரபரக்கும் ராமநாதபுரம்.. யார் இந்த தேவசித்தம்!
இந்திய கேப்டன் தேவசித்தத்தை அரசியல் புள்ளிகள் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video
பரமக்குடி: ராமநாதபுரம் தொகுதியில் இந்திய அணி கேப்டனை பிரபல அரசியல் கட்சிகள் குறி வைத்து காய் நகர்த்துகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும்!
கிரிக்கெட், ஃபுட்பால் என்று இளைஞர்கள் ஒரு பக்கம் படையெடுக்க, 'லங்கடி' எனப்படும் நொண்டி அடித்து தொடுதல் விளையாட்டில் ஆர்வம் காட்டியவர்தான் தேவசித்தம்! லங்காடி விளையாட்டின் இந்திய அணியின் கேப்டன். 2012 மற்றும் 13-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய அளவிலான லங்கடி விளையாட்டில் முதலிடம் பிடித்தவர்.
2014ஆம் ஆண்டு ஆசிய அளவில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலககோப்பைக்கான லங்கடி போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணிதான் தங்கம் வென்றது. இவரது திறமையை அறிந்து ஜெயலலிதா நேரில் அழைத்து பாராட்டும் தெரிவித்தார்.
திமுக கூட்டணி இறுதியானது.. நாங்கள் தேர்தலுக்கு தயார்.. மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
பயிற்சி தருகிறார்
லங்கடி விளையாட்டு வரும் தலைமுறையினருக்கு சென்றடைய வேண்டும் என்று அவர் கிராமத்தில் உள்ள பள்ளி சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வருபவர். எவரஸ்ட் சிகரம் தொடும் பயிற்சியிலும் சாதனை படைத்துள்ளார்.
தமிழன்
இவருக்கு இப்போது வயது 33 ஆகிறது. ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இவரை சில பிரபல கட்சிகள் அணுகுவதும் நாடாளுமன்ற தேர்தலில் சீட் கொடுக்க ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றது. இதற்கு காரணம் உண்டு.. இவர் ஜாதி என்பதை அடையாளப்படுத்தாமல் தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்துவதே ஆகும்.
விருது
சமீபத்தில் கூட எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் ஒரு விழா நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட தேவசித்தன், "ஜாதியை அடையாள படுத்தும் விருது எனக்கு வேண்டாம், இந்திய அணி கேப்டனை கவுரவிக்கும் விருதாக வழங்கினால் மட்டும் நான் ஏற்று கொள்வேன்" என்றதும், அரங்கமே எழுந்து நின்று பாராட்டியது. அதோடு அவர் கேட்டபடியே விருதும் தரப்பட்டது.
சிறப்பு விருந்தினர்
இப்போது நிறைய கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு இவர் பேசும்போதுகூட, "மாணவர்களிடம் நீ எந்த ஜாதி நான், எந்த ஜாதி என்பதை பேசுவதை நிறுத்தி விட்டு என்ன சாதிக்கலாம் என்பதை மட்டும் யோசித்தால் நீங்களும் ஆகலாம் என்னை போன்ற சிறப்பு விருந்தினராக" என்பார். இதனால் அனைத்து சமுதாய இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதுமே உள்ளது.
யாராக இருக்கும்?
மேலும் அரசியல் கட்சிகளை விட இவருக்கே ஆதரவு அதிகமாக உள்ளது என்று உளவுத்துறை அறிக்கை ஒன்றும் வெளியானதும் பிரதான கட்சிகளை இவரை வட்டமடிக்க தொடங்கி உள்ளனராம். ஆனால் அந்த கட்சிகள் எவை என்றுதான் குழப்பமாக இருக்கிறது. அதிமுகவா, திமுகவாக இருக்குமோ அல்லது இளைஞர்களுக்குதான் அதிக வாய்ப்பு என்று சொன்ன பரமக்குடிகாரரின் மக்கள் நீதி மய்யமா? என்பதுதான் தெரியவில்லை.