வேளாண் சட்டங்களை பற்றி எதுவும் தெரியாமல்... எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார் முதல்வர் -ஸ்டாலின்
ராமநாதபுரம்: பா.ஜ.க. முதலமைச்சர்கள் கூட முதலமைச்சர் பழனிசாமி அளவுக்கு வேளாண் சட்டங்களை ஆதரிக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் போல பேசி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் விளக்கம் அளிப்பாரா? என வினவியுள்ளார்.
இராமநாதபுரத்தில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;
ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்..ஒரே போடாக போட்ட ஸ்டாலின்.. செம
மறந்துவிடாதீர்கள்
''கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து, அதனை மக்களுக்கு விதைத்து கோட்டையைப் பிடித்துவிடலாம் என்று எடப்பாடி கும்பல் பேராசையோடு காத்திருக்கிறது. அவர்களது அந்த ஆசை நிறைவேறாமல் தடுக்க வேண்டியது ஒன்றே கழகத் தொண்டனின் பணி என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள்.''
மக்களுக்கு சேவை
''இன்றைக்கு சிலர் ஆன்மீகத்தைக் காரணம் காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு சேவை ஆற்றுவது தான் மகத்தான ஆன்மீகம் என்று சுவாமி விவேகானந்தர், இராமேஸ்வரம் கோவிலில் 1897-ஆம் ஆண்டு பேசும்போது சொன்னார். ஏழைகள், பலவீனமானவர்கள், நோயுற்றவர்களைக் காப்பவனே உண்மையில் இறைவனை வழிபடுகிறவன் என்று சொன்னார் அவர்.இங்கே சிலர் வெறுமனே நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்''.
என்னென்ன திட்டம்
''அடுத்து தி.மு.க. ஆட்சி அமையும் போது என்னென்ன திட்டங்களை இந்த மாவட்ட மக்களின் நன்மைக்காக செயல்படுத்துவது என்பதை இப்போதே திட்டமிடவும் தொடங்கி இருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் கமிஷனுக்காக மட்டுமே பணிகள் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்''.
ஏமாற்றும் ஆட்சி
''இப்படி இந்த ஆட்சி, மக்களை ஏமாற்றும் ஆட்சி; மக்களை ஏய்க்கும் ஆட்சி; மக்களைச் சுரண்டும் ஆட்சி; மக்களை வெறுக்கும் ஆட்சி; விவசாயிகளை வேரோடு பிடுங்கி எறியும் ஆட்சி.இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர் அல்ல. மறுபடியும் தனக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்''.
ஊர் ஊராகப் போய்
''தினமும் ஊர் ஊராகப் போய் அரசாங்க விழாக்களில் கலந்து கொண்டு அரசியல் பேசி வருகிறார் பழனிசாமி. அவருக்கு அரசுக்கும் கட்சிக்குமே வித்தியாசம் தெரியவில்லை!நான் ஒரு விவசாயி, எனக்கு விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் கிடையாது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி. இதனை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என்பது வேறு விஷயம். அ.தி.மு.க.வினரே இதைக் கேட்டால் சிரிப்பார்கள்''.
டெல்லி செல்லுங்கள்
''முதலமைச்சர் அவர்களே நீங்கள் டெல்லி செல்லுங்கள்! அங்குப் போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளிடம் உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்கள். பிரதமர் மோடிக்கே நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிசாமியை அனுப்புங்கள் என்று சொல்லிக் கொள்கிறேன். அந்தளவுக்கு வேளாண் சட்டங்களைக் கரைத்துக் குடித்துவிட்டார் பழனிசாமி''.