முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
Recommended Video
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு வருவதற்கு முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.
மதுரையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவிக்க வந்த போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதனை பொருட்படுத்தாமல் குடையை பிடித்தபடி சென்று மரியாதை செய்தார்.
பசும்பொன் கிராமம்
முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை நிகழ்வு பசும்பொன் கிராமத்தில் இன்று வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்லு சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, மதுரை மூர்த்தி, உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
மாலை அணிவிப்பு
மதுரையில் இருந்து பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னதாக மதுரை வண்டியூரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி-மதுரை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று காலை திருச்சி வந்த நிலையில் மீண்டும் சென்னை செல்லாமல் திருச்சியிலேயே மாலை வரை தங்கினார். அங்கிருந்து கார் மூலம் நேற்றிரவு மதுரை வந்த அவருக்கு மதுரை மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமர்சனம் இல்லை
மு.க.ஸ்டாலினோ, உதயநிதி ஸ்டாலினோ மதுரைக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றால், அதனை விமர்சித்தும், விநோதமாகவும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்து வந்தது. ஆனால் இந்த முறை அது போன்ற போஸ்டர்கள் ஏதும் அழகிரி ஆதரவாளர்களால் ஒட்டப்படவில்லை.