EXCLUSIVE: 20 வருடமாக.. பரமக்குடி சண்முகவள்ளி கடையில் மட்டும் கூட்டம் கட்டி ஏறுவது ஏன்?
பரமக்குடியில் சண்முகவள்ளி தர்பூசணி ஜூஸ் கடை பிரபலமாகி வருகிறது
பரமக்குடி: அது ஒரு பழைய தள்ளுவண்டி.. மரத்தடி நிழலில் இருக்கும் அந்த தள்ளுவண்டி கடை முன்பு கூட்டம் கூடிக் கொண்டே போகிறது! ஏதோ ஃபாஸ்ட்புட்டாக இருக்குமோ என்று பார்த்தால்.. தர்பூசணி கடை!
பரமக்குடி ஹைவேயில் பாரதி நகர் பகுதியில்தான் இந்த தள்ளுவண்டி கடை இருக்கிறது. கடை ஓனர் பெயர் சண்முகவள்ளி! இவரது கணவர் அய்யாதுரை.
இப்போது வெயில் என்பதால், பொதுவாக எல்லா தர்பூசணி, இளநீர் கடைகளில்தான் கூட்டம் இருக்கும். ஆனால் இந்த கடையில் மட்டும் நெரிசல் கொஞ்சம் ஜாஸ்தி! ஆளாளுக்கு மடக் மடக் என தர்பூசணி ஜூஸ் குடித்துகொண்டிருந்தார்கள்!
இருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்!
இதுக்கு என்ன காரணம் என்பதை அறிய "ஒன் இந்தியா தமிழ்" முற்பட்டது! தள்ளுவண்டி ஓனர் சண்முகவள்ளியிடமே பேசினோம்!
கேள்வி: உங்க தர்பூசணி கடைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம் வருது? ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?
ஆமாங்க. நாங்க காட்டு பரமக்குடியை சேர்ந்தவர்கள். 1999-ம் ஆண்டு இந்த கடையை போட்டோம். அன்னையில இருந்து இந்த கடையை நாங்க இங்க இருந்து மாற்றவே இல்லை. இதே கடைதான்.. இதே தர்பூசணி வியாபாரம்தான்!
கேள்வி: வெறும் தர்பூசணி ஜூஸ் குடிக்கவா இவ்வளவு கூட்டம் வருது?
பதில்: ஆமா. ஆனா நாங்க பயன்படுத்து தர்பூசணி இயற்கை முறையில் விளையக்கூடியது. இதை நாங்கள் திண்டிவனம் பக்கம் இருந்து வாங்கிட்டு வந்து விக்கறோம். தினமும் 3 லோடு இறக்குறோம். ரொம்ப ருசியா இருக்கும். இங்க குடிச்சிட்டு வீட்டுக்கும் பார்சல் செய்து எடுத்துட்டு போவாங்க. இதை தவிர, பப்பாளி, அன்னாசி, கிர்ணி பழம் ஜூஸ்களும் இப்போ போட ஆரம்பிச்சிருக்கோம். விலையோ ரொம்ப குறைவுதான்!
கேள்வி: இப்போ இருக்கிற பிள்ளைங்க எல்லாம் தர்பூசணியை விரும்பி சாப்பிடறாங்களா?
பதில்: பசங்க மட்டும் இல்லை.. பெரியவங்கள்ல இருந்து குழந்தைங்க வரை இங்க வருவாங்க. ஆரம்பத்துல ஜூஸ் எல்லாம் கிடையாது. வெறும் தர்பூசணி பழத்தை அறுத்து சின்ன சின்னதா துண்டா வெட்டி ஒரு கிண்ணத்துல போட்டு தருவோம். ருசி நல்லாருக்குன்னு எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. எத்தனையோ கடைங்க இப்படி ஆரம்பிச்சாலும் 20 வருஷமா எங்களுக்குன்னு தர்பூசணி சாப்பிட வர்ற கஸ்டமருங்க அப்படியேதான் இருக்காங்க. இன்னும் சொல்லப்போனா அதிகமாயிட்டுதான் போகுது. அதுக்கு காரணம் காலேஜ் பிள்ளைங்கதான். அவங்க ஃபிரண்ட்ஸ்களை கூட்டிட்டு வந்துடுவாங்க.
கேள்வி: அப்படின்னா உங்களுக்கு காலேஜ் பிள்ளைங்கதான் ரெகுலர் கஸ்டமர்களா?
அவங்க மட்டும்னு சொல்ல முடியாது. இந்த பக்கம் நிறைய பேர் கார்ல போவாங்க. பைக்ல போவாங்க. அவங்களும் வண்டியை இங்க நிறுத்தி ஜூஸ் குடிச்சிட்டுதான் கிளம்பி போவாங்க. ஏன்.. பஸ்கூட இங்க நிறுத்துவாங்க. எப்படியோ ஒரு நாளைக்கு 500 பேருக்கு மேல வருவாங்க.
கேள்வி: வியாபாரம் இவ்ளோ நல்லா போதுன்னா, கடையை இன்னும் பெரிசு பண்ணலாமே?
கடையை பெரிசு பண்றதுக்கு பதிலா, இன்னொரு இடத்துல அதாவது மணிநகர் பகுதியில இதே மாதிரி தள்ளுவண்டி கடை போட்டுட்டோம். அங்கேயும் இதே தர்பூசணிதான்.
கேள்வி: நீங்க ரெண்டு பேரும் இந்த கடையில இருக்கீங்க... அந்த கடையை யார் பார்த்துக்கறாங்க?
என் ரெண்டு ஆம்பள பசங்கதான் பாத்துக்கறாங்க.
கேள்வி: ஏன்.. அவங்கள படிக்க வைக்கலையா?
இந்த தர்பூசணி கடையை வெச்சுதான் அவங்கள படிக்க வெச்சேன். பெரியவன் என்ஜினியரிங் படிச்சிருக்கான். சின்னவன் டிப்ளமோ முடிச்சிருக்கான். என்ன படிச்சாலும் சொந்தமா இப்படி கடையை வெச்சு நடத்துறதுதான் அவங்களுக்கு பிடிச்சிருக்கு. இங்க வர்றவங்க காட்டுற அன்பு எங்களை போலவே அவங்களையும் கட்டி போட்டுடுச்சு" என்கிறார் சண்முகவள்ளி!