தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்றுடன் நிறைவு.. மீன்களின் விலை குறையுமா.? மக்கள் எதிர்பார்ப்பு
ராமேஸ்வரம்: தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம், இன்றுடன் நிறைவடைவதை அடுத்து மீனவர்கள் தங்கள் தொழிலை கவனிக்க இன்று நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான 60 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டம் மீன்களின் இன்பெருக்க காலம் என அறிவிக்கப்பட்டு, மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைப் பகுதிகளான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த மீன்பிடி தடை வருடந்தோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு வரை வருடந்தோறும் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை தான் அமல்படுத்தியிருந்தது.
ஆனால் 2017ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலத்தை 60 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி தடை அமல்படுத்தப்படும் நாட்களில், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
மீன்பிடி தடை அமலில் உள்ள நாட்களில் விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது, அதற்கு வண்ணம் பூசுவது மற்றும் சேதமடைந்த வலைகளை பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த தடை காலத்தில் கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகளில் மட்டுமே சென்று மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தன. இதனால் மக்களின் உபயோகத்திற்கு ஏற்ப மீன் வரத்து இல்லை. இதனால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. தடை காலம் இன்றுடன் முடிவதால், தற்போது விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வர மீனவர்கள் கடலுக்குள் செல்ல உள்ளனர்
இதனையடுத்து மீன்களின் வரத்து முன்போல் அதிகரிக்கும். மீன் வரத்து அதிகரித்தால் மீன்களின் விலையும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். சென்னையை பொறுத்த வரை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், சுமார் 2,500 விசைப்படகுகள் உள்ளன. இவற்றில் 40 சதவீத படகுகளில் மீனவர்கள் நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்கள் கஜா புயலின் போது கடுமையாக பாதிக்கப்பட்டதில் ஏராளமான விசைப்படகுகள் முழுமையாக சேதமடைந்தன அந்த மீனவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிவாரணம் வழங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் விரைந்து தங்கள் படகுகளை தயார் செய்ய முடியவில்லை. இதனால் குறைவான விசைப்படகு மீனவர்கள் தான் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்
குமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் புறப்பட்டு கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர். அதே போல ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்
மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண தொகை இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மீனவர்கள் புலம்பி தவித்து வருகின்றனர்