பரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது
ராமநாதபுரம்: பரமக்குடி அடுத்த தென்னவனூரில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, இரண்டுச் சமூகத்தைச் சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தினர் குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் அவதூறு ஆடியோ வெளியானதால் நேற்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில், காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். மேலும், 144 தடை உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது, பொதுச் சொத்துக்கள் மட்டுமின்றி, வீடுகளை சேதப்படுத்தியதாக தென்னவனூரில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் நீடித்து வருகிறது.
2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே! தேனி தொகுதியில் பெரும் குளறுபடி
இதற்கிடையே, புதுக்கோட்டையில், அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் தொடர்பாக அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் சாலைமறியல் நடந்து வருகிறது. கலவரம் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பினர் இடையே, பேச்சுவார்த்தையிலும், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சுமார் 1000 பேர் மீது பொன்னமராவதி போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 75 சதவிகித நகரப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. பிரச்னை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.