'அந்த இந்து மதம்' தமிழகத்தில் இல்லை.. சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் கனிமொழி பேச்சு
ராமநாதபுரம்: பாஜக சொல்லக் கூடிய இந்து மதம் தமிழகத்தில் இல்லை என்று திமுக லோக்சபா உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டம் ராமநாதபுரம் சந்தை திடலில் இன்று நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக மகளிரணி தலைவியும், தூத்துக்குடி லோக்சபா தொகுதி உறுப்பினருமான கனிமொழி, ராமநாதபுரம் லோக்சபா உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி குடியுரிமை சட்டம் பற்றி விளக்கம் அளித்து உரை நிகழ்த்தினார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற அப்படி என்ன அவசரம்? எல்ஐசி, ரயில்வே என மத்திய அரசின் சொத்துகளை அரசே தனியாருக்கு விற்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் ஆயுதம்தான் குடியுரிமை சட்டம். பாஜகவினர் திருக்குறளை தேசிய புத்தகமாக அறிவிக்க மாட்டார்கள். அது தமிழில் எழுதப்பட்டுள்ளதால், அவ்வாறு ஒரு அறிவிப்பை வெளிியிட மாட்டார்கள். பாஜகவினர் தங்களுக்கு பிடித்த நடிகர்களை தேடிப் பிடித்து குடியுரிமை சட்டத்தால் ஆபத்தில்லை என பிரசாரம் செய்கின்றனர்.
இந்த நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைத்து மக்களும் மறுப்பு சொல்லாமல் ஏற்றனர். இதையே பலவீனம் என நினைத்து, மத்திய அரசு நினைத்ததை எல்லாம் நிறைவேற்ற திட்டமிடுகிறது போலும்.
பாகிஸ்தானை பற்றி எந்நேரமும் பேசிக்கொண்டும், யோசித்து கொண்டும் இருப்பவர் பிரதமர் மோடி ஒருவர்தான். இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவார் என எண்ணி பாஜகவுக்கு வாக்களித்த பெரும்பான்மை இந்துக்களுக்கு அந்த கட்சி என்ன செய்தது?
பாஜக சொல்லும் இந்து மதம் என்பது தமிழகத்தில் இல்லை. இந்து மத பாதுகாவலர் என்று கூறிக்கொள்ள பாஜகவுக்கும் உரிமை இல்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றொரு விடுதலை போர். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.