ராமநாதபுரம் மல்லுக்கட்டு... அன்வர் ராஜா Vs ஜவாஹிருல்லா... தேர்தல் பணிகள் ஜரூர்..!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அன்வர் ராஜா களமிறங்க உள்ளார்.
இதற்கான உறுதியை அன்வர் ராஜாவிடம் அமைச்சர் உதயகுமார் தரப்பு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே ராமநாதபுரம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருவாடானை தொகுதிக்கு இடம்பெயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.
வானம் பார்த்த பூமி
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்று அழைக்கப்படுவது உண்டு. வடகிழக்கு பருவமழையை தவிர ஆண்டின் மற்ற நாட்களில் அங்கு மழை பெய்வது அபூர்வம். வறட்சி பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் மட்டுமே பிரதானம். இதற்கு அடுத்தபடியாக அந்தப் பகுதியை சேர்ந்த சிறுபான்மையினர் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் கோயில்
தேசிய அளவில் பிரபலமான ராமேஸ்வரம் கோயிலுக்கு வடநாடுகளில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பர். இதேபோல் மற்றொரு ஆன்மிக தலமான ஏர்வாடி தர்ஹாவுக்கு தமிழகம், கேரளா என பல மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். இதைத்தவிர பாம்பன் கடல் பாலம், அப்துல் கலாம் நினைவிடம், என இன்னும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன.
மல்லுக்கட்டு
ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன. இதனால் இந்த தொகுதி வேட்பாளர்களாக சிறுபான்மையினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்தும். அந்த வகையில் முன்னாள் எம்.பி.யும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான அன்வர் ராஜா அதிமுக சார்பில் வரும் தேர்தல் அங்கு போட்டியிட விரும்புகிறார்.
திமுக தலைமை
இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்த தொகுதியை மனிதநேய மக்கள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் கேட்டு வருகிறது. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை கொடுத்துவிட்டதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு கொடுக்கும் திட்டத்தில் உள்ளது திமுக தலைமை.
மீண்டும் போட்டி
இதனால் இப்போதே ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொகுதியை தக்க வைத்து மீண்டு அங்கு போட்டியிட விரும்பும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனது பங்குக்கு அவரும் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.