ஓங்கி விசில் அடித்த குக்கர்.. வந்ததே வாசம்! வசமாக சிக்கிய கொத்தனார்!
ராமநாதபுரம்: மது அருந்த முடியாமல் தவித்த கொத்தனார் வீட்டில் குக்கரிலேயே சாராயம் காய்ச்சி உள்ளார். குக்கர் விசிலடித்த நிலையில், அதில் இருந்து வந்த வாசத்தால் இப்போது போலீசில் சிக்கி கம்பி எண்ணி வருகிறார்.
Recommended Video
ஏப்ரல் 23ம் தேதி மாலை 6மணி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மது அருந்த முடியாததால் குடிமகன்கள் பலர் கள்ளச்சாராயம் காய்ச்சி பருகி வருகிறார்கள்.
சிலர் மது அருந்த முடியாத நிலையில் மெத்தனாலை குடித்து உயிரையும் இழந்துவிட்டார்கள் . சிலர் மது அருந்த முடியாத ஏக்கத்தில் தற்கொலையும் செய்து கொண்டார்கள். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. மதுவிற்பனை நிறுத்தப்பட்டு இன்றுடன் கிட்டதட்ட 28 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் கள்ளச்சாராயத்தை பருக தொடங்கி உள்ளனர்.
மது போதை
இராமநாதபுரம் அருகே பனைக்குளம் அடுத்த சேர்வைகாரன் ஊரணியில் வசிப்பவர் கருணாகரன். கொத்தனாராக வேலை செய்து வருபவர். இவரது நண்பர் மருங்கப்பன் என்ற கர்ணன். இருவரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் ஆவர். இவர்கள் தினமும் மது அருந்துவார்களாம்.
மதுக்கடைகள் மூடல்
ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. கள்ளச்சந்தையில் சென்று ஒரு குவாட்டர் வாங்கினால் 1 பாட்டில் ரூபாய் 600 க்கு விற்கப்படுகிறது. இதனால் தானே சாராயத்தை தயார்செய்வது என்று களத்தில் இறங்கினார்கள்.
விசில் சத்தம்
இருவரும் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவரது வீட்டின் பின்னால் பானை மற்றும் குக்கரின் உதவியுடன் சாராயம் காய்ச்ச தொடங்கினார்கள் . சாராயம் காய்ச்சும் போது குக்கரில் இருந்து விசில் வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாராய வாடை வரவே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் வந்தது
விரைந்து வந்த உச்சிபுளி காவல்துறை ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் , காவலர்கள் கருணாகரனையும், கர்ணனையும் , சாராயம் காய்ச்ச பயன்படுத்தபட்ட குக்கர் மற்றும் பாத்திரங்களையும் கொத்தாக அள்ளினார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இருவரையும் விசாரித்ததில் தினமும் குவாட்டர் சாப்பிடாவிட்டால் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை உடல் முழுவதும் நடுக்கம் ஆகிவிட்டது. அதனால் நானே சாராயத்தை தயாரிக்க முடிவு செய்தேன். வெளியில் சென்று வாங்கினால் ஒரு குவாட்டர் 600க்கு விற்கப்படுகிறது எங்கள் கையில் பணம் இல்லாத காரணத்தால் நாங்களே சாராயம் காய்ச்ச முடிவு செய்தோம் என்றார்கள்.
கம்பி எண்ணுகிறார்கள்
ஆனால் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க இருவரும் ஒரு குவாட்டர் பாட்டில் சாராயத்தை ரூ 300க்கு, இவர்களே விற்பனையும் செய்து வந்துள்ளார்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கள்ள மார்க்கெட்டில் ஒரு குவார்ட்டர் ரூபாய் 600 க்கு விற்கப்படுவதுடன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சாராய உற்பத்தியாளராக கட்டிட வேலை செய்து வந்த கொத்தனாரும் அவரது கூட்டாளியும் மாறி உள்ளார்கள். இப்போது போலீசிடம் மாட்டிக்கொண்டதால் ஜெயில் கம்பி எண்ணுகிறார்கள்.