இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
ராமநாதபுரம்: தியாகி இம்மானுவேல் சேகரனின் 62-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ஆண்டுதோறும் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் திமுக சார்பில் அந்தக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட முகமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில், முதல்முறையாக இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு சென்று ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தியுள்ளார். அவருடன் கனிமொழி, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு என பெரிய வி.ஐ.பி.படையே சென்றது.
இந்நிலையில் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தியாகி இம்மானுவேல் சேகரனார் தீண்டாமைக்கு எதிராக பாடுபட்டவர் என்றும் தீண்டாமையை ஒழிக்க போராடியவர் எனவும் புகழாரம் சூடினார்.அதை தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் இஸ்ரேல் செல்வேன் எனக் கூறுவது வேடிக்கை மிகுந்த விநோதமாக இருக்கிறது என விமர்சித்தார்.
அண்மையில் நடைபெற்ற 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நூலிழையில் ஆட்சியை தவறவிட்டது திமுக. 13 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுகவால் பரமக்குடி, நிலக்கோட்டை போன்ற தனித்தொகுதிகளில் வெற்றிபெற முடியவில்லை. இதனால் தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாக்குகளை பெற முடியவில்லை என்பதை திமுக தலைமை உணர்ந்தது.
மேலும், தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருமாறு தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளை சேர்ந்த சிலர் ஸ்டாலினை அழைத்துள்ளனர். அதனால் அவர்களின் அழைப்பை ஏற்று இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.