இப்ப கழிவுநீரை அகற்ற முடியுமா முடியாதா...? ராமநாதபுரம் நகராட்சியை அலறவிட்ட மணிகண்டன் எம்.எல்.ஏ..!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கழிவுநீரை அகற்றும் வரை உரிய இடத்தில் இருந்து நகர மாட்டேன் எனக் கூறி நகராட்சி அதிகாரிகளை அலறவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ.
Recommended Video
தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் கழிவுநீர் அடைப்பு காரணமாக ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் பண்டிகை என்பதால் நகராட்சியில் போதிய ஊழியர்கள் பணியில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மணிகண்டன்
ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இவரிடம் ராமநாதபுரம் வண்டிகாரன் தெருவை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் முறையிட்டுள்ளனர். இதையடுத்து உரிய இடத்தை ஆய்வு செய்த மணிகண்டன் எம்.எல்.ஏ. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
கழிவுநீர்
நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீரை அகற்றுவதற்காக வண்டிகாரன் தெருவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரம் பொருந்திய வாகனம் ஏற்கனவே பழுதடைந்தது எனக் கூறப்படுகிறது. இதனால் முழுமையாக வண்டிகாரன் தெருவில் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்ற முடியாமல் போனதாக தெரிகிறது.
தர்ணா
இந்த தகவல் மணிகண்டன் எம்.எல்.ஏவுக்கு கிடைத்ததும் நேராக அங்கு சென்ற அவர், கழிவு நீரை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் வரை தாம் அங்கிருந்து நகரமாட்டேன் எனக் கூறி தர்ணாவில் ஈடுபடத்தொடங்கினார். இந்த தகவல் நகராட்சி நிர்வாகத்திற்கு கிடைத்ததும் மீண்டும் புகாருக்குள்ளான இடத்துக்கு மாற்று வாகனம் அனுப்பிவைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடிப்படை பிரச்சனைகளை
இதன் பின்னரே மணிகண்டன் எம்.எல்.ஏ. வண்டிகாரன் தெருவில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நகராட்சி தேர்தல் இன்னும் நடைபெறாததால் நகர்மன்ற தலைவருக்கு பதிலாக அதிகாரிகள் பொறுப்பில் நிர்வாகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இதுபோன்ற அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கூட போராட வேண்டியிருக்கிறது.