ஜூன் 3இல் பிறந்தநாள்.. ஜூன் 6-இல் திருமண நாள்.. புதுவீட்டில் வசிக்க விரும்பிய பழனி.. மனைவி உருக்கம்
திருவாடானை: ஜூன் 6-ஆம் தேதி திருமண நாளை கொண்டாடிய ராணுவ ஹவில்தார் பழனி, இந்தியா- சீனா மோதலில் வீரமரணமடைந்த நிலையில் அவர் நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணித்துவிட்டதாக கண்ணீர் மல்க அவரது மனைவி வானதிதேவி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியா- சீனா எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். இந்த தமிழக வீரர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி தொண்டி வீரசிங்கமடம் அருகே உள்ள கடுக்கழூரைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவரது மகன் பழனி (40). தனது 18 வயதில் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார்.
லடாக் எல்லைக்கு வந்த ஹெலிகாப்டர்கள்.. அதிகாலையில் மீட்கப்பட்ட சீன வீரர்களின் உடல்கள்.. பரபர பின்னணி!
பதவி
தற்போது ஹவில்தார் பதவி வகித்து வரும் அவர் இந்திய- சீன எல்லையான லடாக் கல்வார் பகுதியில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி வானதிதேவி. தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரசன்னா (10), திவ்யா (8) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
ராமநாதபுரம்
மனைவியின் தந்தை ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியில் வசித்து வருவதால் பழனி அப்பகுதிக்கு அருகே கழுகூரணியில் நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் வீட்டு கட்டுமான பணிகளை பார்வையிட வந்தார். இந்த நிலையில் ஜூன் 15-ஆம் தேதி இரவு சீன வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இவர் வீரமரணமடைந்தார்.
ராஜஸ்தான்
அவரது உடல் லே பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தானில் ராணுவ வீரராக நிர்வாக பணியில் உள்ள அவரது சகோதரர் இதயக்கனிக்கு தெரிய வந்து அவர் தனது குடும்பத்தினரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி வானதிதேவிக்கு ஆறுதல் கூற அவரது உறவினர்கள் வீட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
புதுவீடு
கணவரின் வீரமரணம் குறித்து வானதிதேவி கூறுகையில் ஜூன் 3-ஆம் தேதி கணவருக்கு பிறந்தநாள், அன்றைய தினம் புது வீட்டிற்கு பால் காய்ச்சினோம். அப்போது என்னுடன் போனில் பேசினார். பின்னர் ஜூன் 6-ஆம் தேதி எங்களுக்கு திருமண நாள், அன்றைய தினமும் நாங்கள் இருவரும் பேசினோம். அப்போது இன்னும் ஓராண்டில் பணி நிறைவடைய போவதாகவும் ஊருக்கு வந்தவுடன் புது வீட்டில் வசிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
உயிர் அர்ப்பணிப்பு
இந்த நிலையில் அவர் நாட்டுக்காக தனது உயிரையே அர்ப்பணித்துவிட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்தார். சீன ராணுவத் தாக்குதலில் வீரமரணமடைந்த பழனியின் சகோதரர் இதயகனிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு ஒரு சகோதரி உள்ளார். பழனியின் உடல் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியிலிருந்து திருவாடானைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.