வெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
ராமநாதபுரம்: வெள்ளைமனம் இல்லாத ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்பதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக முதலீடுகளை தமிழகத்திற்கு பெற்று உலகின் 8-வது அதிசயத்தை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். அமைச்சர் இவ்வாறு பேசிய போது அங்கிருந்த அதிமுகவினரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
மேலும், ஸ்டாலினின் வெள்ளை அறிக்கை அரசியல் தமிழக மக்கள் மத்தியில் எடுபடாது எனத் தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்காலத்தில் செய்ய முடியாததை எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து முடித்துள்ளதாக கூறினார்.
முன்னதாக இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மாவட்டச்செயலாளர் முனியசாமி தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆர்.பி.உதயகுமாருடன் முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா, அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் ஒரு சில எம்.எல்.ஏ.க்களும் அங்கு வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மட்டும் மிஸ்ஸிங்.