"1955ம் ஆண்டு".. ஒத்த வார்த்தையில் மொத்த பேரையும் மிரள செய்த செல்லூர் ராஜு!
சுதந்திரம் பெற்ற வருடத்தை தவறாக சொன்னார் அமைச்சர் செல்லூர் ராஜு
ராமநாதபுரம்: இன்னும் கஜா பகீரையே தாங்க முடியல... அதுக்குள்ள இன்னொரு இடியை நம்ம தலையில இறக்கினா எப்படிதான் தாங்கறது? அதுவும் ஒரு மாநில அமைச்சரே இப்படி செய்யலாமா?
திமுக, அதிமுகவை கட்டிக்காத்த தலைவர்கள் கருணாநிதி ஆகட்டும், எம்ஜிஆர் ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும்... சட்டப்பேரவையில் பேசும்போதெல்லாம் குறிப்பே எடுத்து வைத்து கொள்ளாமல் அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களுடன் பேசி அசத்தி விடுவார்கள்.
ஒரு தடவை கூட இவர்கள் உளறியதாக சரித்திரமே இல்லை.அதேபோல, இவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் பேசுவதானாலும் சரி தங்கள் அரசியல் அனுபவங்களை அப்படியே கவனமாகவும் அதே சமயத்தில் சரளமாகவும் பேசினார்கள்.
உளறல்கள்
ஆனால் தற்போதுள்ள "தலைவர்கள்" எப்படி இருக்காங்க தெரியுமா.. வாயைத் திறந்தாலே உளறல்தான் கொப்பளிக்கிறது. எதை வேண்டுமானாலும் பேசுவது, என்ன வேண்டுமானாலும் பகீர் கிளப்புவது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, கண்டபடி பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றின் மூலம் தங்கள் அதிரடிகளை காட்டிக் கொண்டே கடந்த 2 வருடங்களை ஓட்டி வருகிறார்கள்.
டாப்பில் உள்ளவர்
பொழுது விடிந்து பொழுது போனால், என்ன பேசுகிறோம் என்றே புரியாமல் எதையாவது பேசிவிட்டு போகிறார்கள். ஜெயலலிதா மறைந்ததலிருந்தே இப்படித்தான் நடந்து வருகிறது. இதில் டாப் கியர் போட்டு முன்னணியில் உள்ளவர் அமைச்சர் செல்லூர் ராஜூ.
1955-ல்...
இவர் அமைச்சரானதில் இருந்தே அக்கப்போர்தான். எதை பேசினாலும் அது சர்ச்சைதான்.. வைரல்தான். ராமநாதபுரத்தில் கூட்டுறவு வார விழா நடந்திருக்கிறது. இதில்பங்கற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு துறை பற்றி மேடையில் பேசி கொண்டே வந்தார். அப்போது திடீரென்று "1955-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு.." என்று தொடங்கி பேசினார். அவர் மட்டும்தான் பேசினார்.
என்னவா இருக்கும்?
ஆனால் அவர் என்ன பேசினார் என்று யாருக்குமே அதற்கு மேல் காதில் விழவேயில்லை. அமைச்சர் செல்லூர் ராஜூ எப்போது 1955 என்று சொன்னாரோ, அப்போ ஷாக் ஆனவர்கள்தான்.. அந்த 1955- என்ற ஒத்தை வார்த்தையிலேயே அப்படியே பிரம்மை பிடித்தவர்கள் போல் உட்கார்ந்துவிட்டனர். 1947-க்கும் 1955-க்கும் அப்படி என்ன குழப்பமோ அமைச்சருக்கு தெரியவில்லை. 1955-ல் அப்படி என்னவா இருக்கும்???