துப்பாக்கியுடன்.. கலெக்டரை சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ.. என்னவா இருக்கும்?
கலெக்டர் அலுவலகத்துக்கு துப்பாக்கியுடன் கருணாஸ் வந்திருந்தார்
ராமநாதபுரம்: என்ன காரணமாக இருக்கும் என்று உறுதியாக தெரியவில்லை.. ராமநாதபுரம் கலெக்டர் ஆபீசுக்கு எம்எல்ஏ கருணாஸ் துப்பாக்கியுடன் வந்திருந்தார்!
வழக்கம்போல நேற்று ராமநாதபுரம் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. அப்போது, பேரிடர் மீட்புக்குழுவிற்கான சாதனங்களை கலெக்டர் வீரராகவராவ் வழங்கி கொண்டிருந்தார்.
பகல் 1.30 மணி இருக்கும்.. அப்போது திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், கலெக்டர் வீரராகவராவை சந்திக்க வந்திருந்தார். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழாவில் கருணாஸ் பங்கேற்பதாக இருந்தது.
அதற்காக கலெக்டரையும் தன்னுடன் விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவே கருணாஸ் வந்திருந்தார். கலெக்டரை சந்தித்து பேசியபோது, கருணாஸ் இடுப்பில் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கி உறையுடன் காணப்பட்டது. எதற்காக கருணாஸ் துப்பாக்கியை எடுத்து கொண்டு கலெக்டர் ஆபீஸ் வர வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் சலசலத்தனர்.
ஆனால், எப்பவுமே கருணாஸ் துப்பாக்கி வைத்திருப்பாராம். முறையான லைசென்ஸ் வாங்கி பல வருடங்களாகவே துப்பாக்கி வைத்துள்ளராம். ஆனால் வழக்கமாக காரில்தான் துப்பாக்கி இருக்குமாம். தற்போதுதான் இடுப்பில் வைத்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஒருவேளை நேற்று வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தபடுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்புக்காககூட துப்பாக்கியை கொண்டு வந்திருக்கலாம் என்றும் காரணம் சொல்லப்படுகிறது.