எனது கட்சி நிர்வாகிகளை நம்பவேண்டாம்... கருணாஸ் எம்.எல்.ஏ. ஓபன் டாக்
ராமநாதபுரம்: தமிழக அரசிடம் நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொடுப்பதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் யாராவது வந்தால் அவர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கருணாஸ் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.
சொந்தக் கட்சி நிர்வாகிகளை பற்றி பொதுவெளியில் கருணாஸ் இப்படி பேசியிருப்பது முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
கருணாஸ் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நம்ப வேண்டாம்
அப்போது பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. தாம் நடத்தி வரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகிகள் அரசிடம் உதவிகள் பெற்றுத்தருவதாக வந்தால் மக்கள் அவர்களை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்தார். இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களை திடுக்கிடச் செய்தது.
நடவடிக்கை
திருவாடானை தொகுதி பொதுமக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் அது தொடர்பான மனுக்களை தன்னிடமே நேரடியாக வழங்கலாம் என்றும், தாம் இல்லை என்றால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ கொடுக்கலாம் எனக் கூறினார்.
அதிருப்தி
சொந்தக் கட்சியின் நிர்வாகிகளையே கருணாஸ் இப்படி பேசியது, அவரது கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில நிர்வாகிகள் கருணாஸ் பேச்சைக் கேட்டு அதிருப்தி அடைந்ததோடு பெரும் கோபமும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.