செத்தாகூட அவன் வரகூடாது.. கீதாதான் எல்லா காரியத்தையும் செய்யணும்.. அதிரவைத்த 90 வயசு தாத்தா
மகன் மீது 90 வயது முதியவர் ஒருவர் ராமநாதபுர மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்
ராமநாதபுரம்: "வேணாங்க.. நான் செத்தா கூட அவன் என் முகத்துல விழிக்ககூடாது.. எனக்கு இறுதி சடங்கைகூட என் மகன் செய்யவே கூடாது" என்று 90 வயசு பெரியவர் ஒருவர் மனசெல்லாம் பாரமுடன் மாவட்ட எஸ்பியிடம் ஒரு மனுவை தந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. வயசு 90 ஆகிறது. ரொம்ப நாளாகவே உடம்பு சரியில்லாமல் போல இருக்கு.
இந்நிலையில் நேற்று திடீரென செல்லமுத்துவை அவரது மகள் கீதா ஒரு வேனில் வைத்து எஸ்பி ஆபீசுக்கு கூட்டி வந்தார். அப்போது அவர்களது வக்கீலும் வந்திருந்தார்.
"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா".. தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்!
3 பிள்ளைகள்
எஸ்பி ஓம்பிரகாஷ் மீனாவிடம் ஒரு மனு தரப்பட்டது. அந்த மனுவின் சுருக்கம் இதுதான்: "கங்கா தேவி, அன்பழகன், கீதா 3 பிள்ளைகள் உள்ளனர். என் சொத்தை 3 பேருக்கும் பிரித்து தந்துவிட்டேன். இதில் கீதா தவிர மற்ற 2 பேர் தனிக்குடித்தனம் சென்றுவிட்ட நிலையில், என்னையும், மனைவி நாயகத்தையும் இளைய மகள் கீதாதான் கவனித்து கொண்டார்.
இறுதி சடங்கு
கல்யாணம் பண்ணிட்டு போன மூத்த மகளும், மகனும் பெற்றோரை கொஞ்சமும் கவனிக்கவில்லை. வயசான நிலைமையில் அடுத்தவர்களின் தயவை எதிர்பார்க்க வேண்டி உள்ளது. 2012-ல் என் மனைவி இறந்துவிட்டார். அந்நேரத்தில் மட்டும் ஊர் பெரியவர்கள் தலையீட்டால், எனது மனைவியின் உடலை அவன் வீட்டுக்கு எடுத்துச்சென்று இறுதிச் சடங்கு செய்தான்.
செய்யகூடாது
ஆனால் உயிரோடு இருக்கிறவரை எங்களை கவனிக்காத மகன் அன்பழகன், இனி நான் இறந்த பிறகும் இப்படித்தான் பிரச்சனை பண்ணி என் உடலை எடுத்துட்டு போய் சடங்கு செய்வான். எனக்கு அவன் இறுதிசடங்கு செய்யக்கூடாது.
பாதுகாப்பு
என்னை இப்போதுவரை பராமரித்து வரும் இளைய மகள் கீதாதான் இறுதிக் காரியங்கள் செய்ய வேண்டும். இதுபற்றி எனது சுயநினைவோடு உயிலும் எழுதி வைத்துள்ளேன். நான் இறந்த பிறகு, அன்பழகனால் கீதாவுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
நடவடிக்கை
இந்த மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து முதியவரை அனுப்பி வைத்தார். 90 வயசில்.. இப்படி ஒரு சோகத்தையும், இப்படி ஒரு புகார் மனுவையும் பார்த்து அங்கிருந்தோர் கண்கலங்கி விட்டனர்!