ராமேஸ்வரம் அருகே 100 மீட்டர் அளவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடல் திடீரென உள்வாங்கியதால், அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மாமல்லபுரம் உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகளில் கடந்த இரு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால் தனுஷ்கோடி பகுதியில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. பாம்பன் பகுதியிலும் பலத்த சூறாவளி வீசியதால் தானியங்கி சிக்னலில் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7 மணி வரை பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வீசும் சூறைக்காற்று காரணமாக சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் சூறைக்காற்றால் ராமேஸ்வரம் பகுதிக்குட்பட்ட கடலில், சீற்றமும் சற்று அதிமாகவே காணப்பட்டது.
கடல் அலைகள் வழக்கத்தைவிட மிக அதிக உயரத்திற்கு எழும்பின. இதனால் பொதுமக்கள் கடலில் இறங்கி விளையாட கடலோர காவல்படையினர் அனுமதி மறுத்து விட்டனர். கடந்த இரு நாட்கள் விடுமுறை தினம் என்பதால், ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடலில் இறங்கி விளையாடி பொழுதை கழிக்க ஆர்வமுடன் வந்திருந்தனர்.
கடலோர காவல்படையினரின் தடையால் அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் சங்குமால், ஓலைக்குடா, அக்னிதீர்த்தம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக, 100 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் பீதியடைந்தனர்.
கடல் திடீரென 100 மீட்டர் அளவிற்கு உள்வாங்கியதால் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன. மேலும் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகளும் தரைதட்டின. இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு அச்சம் நிலவியது.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கடல் நீர் பெருக்கெடுத்து வந்து சாதாரணமாக காட்சியளித்தது கடல். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் நிம்மதியடைந்தனர்.