என்னால மாடு பிடிக்க முடியாது.. அதனால அப்படி என்னை சொல்லாதீங்கப்பா.. ஓபிஎஸ் கலகல பேச்சு!
ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தார்.
ராமநாதபுரம்: "என்னால மாடு பிடிக்க முடியாது.. மாட்டை பிடிக்க சொல்லிட்டா, வம்பாயிடும்.. அதனால என்னை 'ஜல்லிக்கட்டு நாயகன்'னு பட்டப் பெயர் வெச்சு கூப்பிடாதீங்கப்பா" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தலைதூக்கியபோது முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்தான். இந்த பிரச்சனை உலகம் முழுக்க வெடிக்க போகிறது என்று ஆரம்பத்தில் ஓபிஎஸ்-க்கு தெரியாது. போக போகதான் இளைஞர் எழுச்சியை பார்த்து மிரண்டார்.
அதன்பிறகு அதனை சாதுர்யமாக கையாண்டு, கடைசியில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட அனுமதி பெறப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவுக்கு நேரிலும் சென்றார் ஓபிஎஸ்! இந்த சமயத்தில் இருந்துதான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று இவரை பட்ட பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தார்கள்.
நயினார் நாகேந்திரன்
இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதிக்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது பேசிய ஓபிஎஸ், "எந்த கொம்பனாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.
டீக்கடை
ஜோசியக்காரர்கள் சொன்னதால் ஒருவர் நடந்து வந்தார். சைக்கிளில் வந்தார்.. டிராக்டரில் வந்தார். கரும்பு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சினார். எதுவுமே நடக்கவில்லை. கடைசியில போய் டீக்கடையில் டீ குடித்தார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை" என்று சொல்லி கொண்டே போனார்.
மாடு பிடிக்க முடியாது
அப்போது கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நாயகன் பட்டபெயரை தருவதாக சொன்னார்கள். உடனே ஓபிஎஸ், "ஏம்பா.. அப்படியெல்லாம் என்னை கூப்பிடாதீங்க.. ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு சென்றால், என்னை மாடு பிடிக்க சொல்ல போகிறார்கள். அந்த பட்டத்துக்கு நீங்க தகுதியானவர்தானா.. எங்கே மாட்டை பிடித்து காட்டுங்கள் என்றால், என்னால் மாடு பிடிக்க முடியாது" என்று நைசாக அந்த பட்டப்பெயரையும் தட்டிக்கழித்துவிட்டார் ஓபிஎஸ்!
மோடி வருகை
இதோடு விட்டிருந்தால்கூட பரவாயில்லை.. ஜல்லிக்கட்டு தமிழகத்தில் திரும்பவும் நடைபெற காரணமே பிரதமர்தான்" என்று ஒரு பெரிய ஐஸ் ஒன்றினையும் வைத்துவிட்டு நகர்ந்தார். பிறகுதான் காரணம் புரிந்தது.. வருகிற 13-ம் தேதி ஓபிஎஸ் மகனுக்கு பிரச்சாரம் செய்ய தேனிக்கு வரப்போகிறார் பிரதமர்!