தனுஷ்கோடி புயலுக்கே தாங்கிய பாம்பன் பாலம்.. இந்த புரேவிக்கெல்லாம் அசையுமா?.. அத்தனை ஸ்டிராங்காச்சே!
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி புயலுக்கே தாங்கிய பாம்பன் பாலத்தை இந்த புரேவி புயல் என்ன செய்யும்? எனவே பாம்பன் அருகே கரையை கடந்தாலும் அச்சப்படத் தேவையில்லை மக்களே!
புரேவி புயல் நாளை கன்னியாகுமரி- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. பாம்பன் பாலத்தின் பலம், வரலாறு தெரியாத வெகு சிலர் இந்த புரேவியை கண்டு அஞ்சுகிறார்கள். தற்போது பாம்பன் பாலத்தின் வரலாறு குறித்து பார்ப்போம்.
பாம்பலன் பாலம் என்பது ஒரு ரயில் பாலம். இது இந்தியாவின் நிலபரப்பான மண்டபம் பகுதியையும் ராமேஸ்வரத்தின் பாம்பன் தீவையும் இணைக்கிறது. இந்த பாலம் கடந்த செப்டம்பர் 24, 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் கடல் பாலமாகவும் மிக நீண்ட கடல் பாலமாகவும் இருந்தது.
கடல் பாலம்
ஆனால் 2010-ஆம் ஆண்டு பாந்த்ரா- வோர்லி இடையே கடல் பாலம் அமைக்கப்பட்டதால் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமையை இது தட்டிச் சென்றுவிட்டது. பாம்பன் பாலத்தின் கீழ் கப்பல்கள் செல்ல ஏதுவாக நடுப்பகுதியை உயரமக தூக்கும் அளவுக்கு வடிவமைத்துள்ளனர். இந்த பாலம் வழியே மாதந்தோறும் 10 கப்பல்கள் செல்லும்.
வாரம் ஒரு முறை திறப்பு
பாலத்தின் இடையே 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இரு புறமும் உள்ள தூணின் உயரம் 220 அடியாகும். இந்த பாலத்தை கட்ட 5000 டன் சிமென்டும் 18 ஆயிரம் டன் எஃகு இரும்பும் பயன்படுத்தப்பட்டது. இந்த பாலம் கப்பல்களுக்காக வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. துருப்பிடிக்காத வகையில் ஜோராக அமைக்கப்பட்டுள்ளது பாம்பன் பாலம்.
உருத்தெரியாமல் அழிந்த நகரம்
பாம்பன் பாலம் அமைக்கப்பட்ட பகுதி சுனாமி ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதியாகும். 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடி புயலால் இந்த பாலத்திற்கு எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. ஆனால் தனுஷ்கோடி நகரம் முழுவதும் உருத்தெரியாமல் அழிந்து போனது.
சுனாமி
மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி ஏற்பட்டு அலையின் உயரம் 40 முதல் 50 அடி உயரம் வரை எழும்பி தனுஷ்கோடி நகரமே மூழ்கியது. எனவே புரேவி புயலை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.