எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லாததே அதிமுக தோற்க காரணம் - அன்வர் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு
தற்போது உள்ள தலைவர்கள் ஓட்டு கேட்டு வரும் போது எம்ஜிஆர் ,ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்ததால் மக்களும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை மறந்துவிட்டனர் என்று அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்:அதிமுகவிற்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் இந்த மூன்றும்தான் அதிமுக ஓட்டு வங்கியை காப்பாற்றி வைத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொன்னால்தான் அதிமுகவிற்கு ஓட்டு போடுவார்கள். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணமாகி விட்டது என்று அதிமுக மாஜி எம்.பி பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வராவிட்டாலும் யாரும் வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் நிறுவனர் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாக பிளவு பட்டது. சில ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றாக இணைந்து. 30 ஆண்டுகாலம் கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டுடன் கொண்டு செலுத்தினார் ஜெயலலிதா.
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்தது அதிமுக, மாறி மாறி வெற்றி தோல்வியை சந்தித்தாலும் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தது.
திமுகவில் 25 அதிமுக எம்எல்ஏக்களா?.. சசிகலாவுக்கு 10 எம்எல்ஏக்களா?.. எடப்பாடி பழனிசாமிக்கு புது செக்
முதல்வரான இபிஎஸ்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்ற நினைத்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்லவே, அவருக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமனம் செய்யப்பட்டார்.
இரட்டைத் தலைமை
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். இரட்டை இலையும் அதிமுகவும் மீண்டும் முடங்கியது. இதனையடுத்து ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்து முடங்கிய கட்சி, சின்னத்தை மீட்டெடுத்தனர். கட்சியை இருவரும் வழிநடத்தி வருகின்றனர்.
சசிகலா பேட்டி
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகி வந்த சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று இரட்டை தலைமை அறிவித்தது. தீவிர அரசியலில் ஈடுபட நினைத்த சசிகலா ஒதுங்குவதாக கூறினார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்கட்சி வரிசையில் அமரவே மீண்டும் அதிமுகவை மீட்பேன் என்ற சபதத்துடன் களத்தில் இறங்கியுள்ளார் சசிகலா. ஆடியோவில் அதிமுகவினருடன் பேசிய சசிகலா தற்போது தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகிறார்.
எம்ஜிஆரை மறந்தது ஏன்
சசிகலா உடன் பேசிய பலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேறு கட்சிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா பரமக்குடியில் நடந்த அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர்,ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்ததால் மக்களும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை மறந்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
மக்கள் மறந்து விட்டனர்
தேர்தல் நேரத்தில் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா என்று தான் மக்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். அப்படி அவர்களின் பெயரை சொல்லாமல் மறந்து போனவர்களை மக்களும் மறந்து விட்டனர் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து விட்டது என்றும் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவிற்காக தற்கொலை
இந்த தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம். ஜெயலலிதா இருந்தபோதும் நாம் தோற்று இருக்கிறோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க் கட்சியாக இருந்தோம். ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்றார்.
300 பேர் இறந்திருப்பார்கள்
ஜெயலலிதா உயிருடன் இருந்து இத்தேர்தலில் 70 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை இதுகுறித்து யாரும் வருத்தப்படவில்லை, யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறாரா ? எனவும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.