வீட்டுக்கு வா...இல்லாட்டி பெயில்தான் - பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை. ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மாணவிகளிடம் பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் ஹபீப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்: உன் வீட்டிற்கு தெரியாமல் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா இல்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடையவிட மாட்டேன் என மாணவிகளை மிரட்டிய அறிவியல் ஆசிரியரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர்கள், உடல்கல்வி ஆசிரியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சிக்கியுள்ளவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப்.
ஆசிரியர் ஹபீப் மாணவிகளை மிரட்டி பணிய வைக்க முயன்ற ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஹபீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிவியல் ஆசிரியர்
முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ஹபீப்.
இவர் மாணவிகளின் பெற்றோர் இல்லாத நேரங்களில் மாணவிகளை தொடர்பு கொண்டு சபலத்துடன் பேசுவாராம்.
பெயில் ஆகி விடுவாய்
உன் வீட்டிற்கு தெரியாமல் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா இல்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடையவிட மாட்டேன் எனவும், சில மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு இதற்கு முன் அந்த மாணவிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார் ஹபீப்
வைரலான ஆடியோ
நாம் பேசியது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் நமக்குள் மட்டுமே இருக்கட்டும் எனவும் ஹபீப் பேசியுள்ளார்
ஹபீப் பள்ளி மாணவிகளுடன் ஆபசமாக பேசிய ஆடியோ பதிவு தற்போது வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரகசிய இடத்தில் விசாரணை
ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்ததை அடுத்து இது குறித்து தற்போது ராமநாதபுரம் ஏடிஎஸ்பி தலைமையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி, இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
போக்சோ சட்டத்தில் கைது
ஆடியோவில் உள்ளது ஹபீப் குரல்தான் என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாணவிகளிடம் ஆபசமாக பேசி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஹபீப்பை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.