கேட்ட வரம் கிடைத்தது... மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய ரஜினிகாந்த் ரசிகர்கள்..!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததையொட்டி அவரது ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரையை அடுத்த கரிசல்குளத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது மானாமதுரை சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்தவகையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே வேண்டிக் கொண்டுள்ளார்கள் போல்.
அவ்வாறு ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டால் தாங்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும் வேண்டியிருக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடக்கம் குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிட உள்ளதாலும் கடந்த வாரம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என அவர் அறிவித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துப் போகினர்.
வாழ்த்திய மோடிக்கு ரஜினிகாந்த் ஸ்பெஷல் நன்றி! எடப்பாடி முதல் ஸ்டாலின் வரை மற்ற தலைவர்களுக்கும் நன்றி
இதையடுத்து ஏற்கனவே வேண்டிக்கொண்டப்படி மண்சோறு சாப்பிட முடிவெடுத்த ரஜினி ரசிகர்கள் டிசம்பர் 12-ம் தேதியான நேற்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர். இதனிடையே தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் இப்போதே தங்கள் தலைவருக்காக வாக்குக் கேட்கும் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.
திமுக, அதிமுகவுக்கு இணையாக கிளை வரை ரஜினி தொடங்க உள்ள இயக்கத்தின் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.