இது என்ன சோதனை! நேற்று சின்ன எம்.ஜி.ஆருக்கு சமாதானம்; இன்று ஆறுதல் கூறக்கூட ஆளில்லாமல் தனிமரம்!
ராமநாதபுரம்: அன்வர் ராஜாவின் பேச்சை நம்பி திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி ஒருவர் புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுகவிலேயே இருந்திருந்தால் கூட கவுரவமாக இருந்திருக்க முடியும் எனக் கருதும் அவர், அன்வர் ராஜாவை நம்பியதால் நட்டாற்றில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக உணர்கிறாராம்.
இது தொடர்பான முழு பின்னணியை இங்கே பார்ப்போம்.
அதிர்ச்சி தந்த ஆடியோ கால்.. ஒருமையில் பேசிய அன்வர் ராஜா.. அதிமுகவிலிருந்து நீக்கம் ஏன்? நடந்தது என்ன
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினரால் சின்ன எம்.ஜி.ஆர். என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவர் புதுமடம் தர்வேஸ். எம்.ஜி.ஆரை போன்ற சாயல் வர வேண்டும் என்பதற்காக அவரை போலவே சிகையலங்காரம், ஜிப்பா வைத்த சட்டை என அணிந்துகொண்டு அதிமுகவில் நீண்ட நெடுங்காலமாக இருப்பவர் இவர். அதிமுகவில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி நான்கு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு அழைப்பை ஏற்று அவர் திமுகவில் இணைந்திருக்கிறார்.
பேச்சை நம்பி
இந்த தகவலை அறிந்த அன்வர் ராஜா, காலையில் திமுகவில் இணைந்த புதுமடம் தர்வேஸை அன்று மாலையே மீண்டும் அதிமுகவுக்கு அழைத்து வந்துவிட்டார். தலைமையிடம் பேசி கட்சியில் மாவட்டத்தில் நல்ல பொறுப்பு பெற்றுக்கொடுப்பதாக கூறிய அன்வர் ராஜா, தொடர்ந்து அதிமுகவிலேயே பயணிக்குமாறு அவருக்கு சமாதானம் எல்லாம் செய்து அட்வைசும் செய்திருக்கிறார். இதனால் அன்வரின் பேச்சை நம்பி திமுகவில் நான் இணையவில்லை, சும்மா பார்க்கத் தான் போயிருந்தேன் என 12 மணி நேரத்தில் அந்தர்பல்டி அடித்தார் புதுமடம் தர்வேஸ்.
சமாதானம்
இந்நிலையில் அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து கட்டம் கட்டிய தகவலை அறிந்ததும், பெரிய மனுஷன் என்று இவர் பேச்சை நம்பி மீண்டும் அதிமுகவுக்கு வந்தோமே, கடைசியில் இவர் நிலையே இப்படியாகிவிட்டதா என புலம்புவதாக தெரிவிக்கப்படுகிறது. சின்ன எம்.ஜி.ஆர். என செல்லமாக அழைக்கப்படும் புதுமடம் தர்வேசுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அன்வர் ராஜா சமாதானம் கூறிய நிலையில், இன்று அவருக்கே சமாதானம் கூற ஆளில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் தூது?
பெங்களூரு புகழேந்தி மட்டுமே நேற்றிரவு முதல் இரண்டு முறை அன்வர் ராஜாவை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அன்வர் ராஜாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் தூண்டில் வீசி வருவதும், அதற்கு ராமநாதபுரம் மாவட்ட திமுகச் செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் திமுகவை தாக்கி அவர் பேசியது கொஞ்சம் நஞ்சமல்ல என தலைமைக்கு மாவட்டச் செயலாளர் தரப்பு தெரிவித்திருக்கிறதாம்.