ராமநாதபுரம் இளைஞர் படுகொலை.. மதப் பிரச்சினை காரணம் அல்ல.. ராமநாதபுரம் காவல்துறை விளக்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் என்ற இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம் என்றும் இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
ராமநாதபுரம் கள்ளர் தெருவில் வசித்து வருபவர் அருண்பிரகாஷ் வயது 23.. அதே பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன்(20). இவர்கள் இரண்டு பேரும் திங்கட்கிழமை சாய்ந்திரம் அவர்களது தெரு முனையில் நின்று கொண்டிருந்தார்கள்
அப்போது இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 12 பேர் கும்பல் , அருண்பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரனை சுற்றி வளைத்து தாக்க முயன்றது. இதனால் இருவரும் அவர்களிடம் இருந்து தப்பிடித்து ஓடினர். ஆனால் இடைவிடாது துரத்தி சென்ற கும்பல், அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியும் கத்தியால் குத்தியும் உள்ளது.
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள்... 33% உணவு தானியங்கள்... மட்டுமே விநியோகம்!!
ரத்த வெள்ளம்
இந்த கோர சம்பவத்தில் அருண்பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன்பிறகு அங்கிருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்றனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அருண் பிரகாஷ் பலியானார்.யோகேஸ்வரனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் அளித்த உறுதி
இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளை கைது செய்யும் வரை அருண்குமாரின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் அளித்த வாக்குறுதியை ஏற்று உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டார்கள்.
வெட்டிய கும்பல்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் இருவரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக திங்கட்கிழமை அன்று மதியம் 12 மணி அளவில் வைநகரைச் சேர்ந்த சரவணன் நாகநாதபுரத்தைச் சேர்ந்த சபிக் ரகுமான் ஆகியோரை தாக்கினார்களாம்.இதனால் ஆத்திரமடைந்த அவர்கர்கள், தங்களது நண்பர்களான லெப்ட் ஷேக் உள்ளிட்டவர்களுடன் சென்று கள்ளர் தெரு முனையில் பேசிக் கொண்டிருந்த அருண்பிரகாஷ் மற்றும் யோகேஷ்வரனை வெட்டிக் கொன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையில் ஈடுபட்டது
பின்னர் சரமாரியாக வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. லெப்ட் சேக் உடன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்ரான்கான், சரவணன், வெற்றி, சதாம், ஹக்கிம், வாப்பா என்ற ரஷீக், அசார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
4 பேர் சிக்கினர்
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ், சாகுல் ஹமீது ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். லெப்ட் சேக் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். அருண் பிரகாஷ் விநாயகர் சதுர்த்தி கமிட்டியில் வசூல் செய்யும் பொறுப்பில் கடந்த வருடம் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் ஏதேனும் முன்விரோதம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத முன்விரோதம்
இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லெப்ட் ஷேக் ஒரு வருடத்திற்கு முன்பு இந்து முன்னணியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினரான திருப்புல்லாணி சக்திவேலை கொலை செய்ய முயன்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் மதரீதியான முன்விரோதம் ஏதும் இதில் உள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.
போலீஸ் விளக்கம்
இந்நிலையில் ராமநாதபுரம் போலீசார் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.