வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா?.. ராமநாதபுரத்தில் பரபரப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6 பேர் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து ராமநாதபுரம் கடல் பகுதி வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பிரப்பன்வலசை
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதா என கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
நோட்டமிட்ட போலீஸ்
இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அந்த வீட்டில் வள்ளி என்பவர் மட்டுமே இருந்தார்.அவர் தையல் தொழில் செய்து வருகிறார். அவரது நடவடிக்கையை நோட்டமிட்ட போலீஸார் திடீரென அதிரடியாக நுழைந்தனர்.
விசாரணை
அப்போது வீட்டை சோதனையிட்ட போது அங்கு கைதுப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றிய போலீஸார் வள்ளியை கைது செய்தனர். வள்ளிக்கு கைத்துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பா
இவரது கணவர் லோகநாதன் (42) கடந்த சில தினங்களுக்கு முன்னால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.