காசு வாங்கிட்டு கைதும் பன்னுவீங்களா? - இலங்கைக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கம் கண்டனம்
ராமேஸ்வரம்: பொருளாதார நெருக்கடியால் இந்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி பெற்றுவிட்டு, எல்லை தாண்டியதாக 12 தமிழக மீனவர்களையே இலங்கை கடற்படை செய்திருப்பதாக மீனவர் சங்கத்தினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மார்க்கோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகை தடுத்து நிறுத்தினர்.
அதிலிருந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள், விசைப்படகுடன் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கடற்படையின் இச்செயலுக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அரசை மீட்பதற்காக இந்திய அரசு பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டியதாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்." என்றனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய மீனவர் சங்கத்தினர், படகுகளையும் விடுவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.