சித்து வேலை காட்டிய மந்திரவாதி.. ராத்திரி பூஜை.. வைரம் எடுப்பதாக சொல்லி.. சிக்கிய டுபாக்கூர் கும்பல்
ராமநாதபுரத்தில் போலி சாமியார் உட்பட 5 பேர் கைதாகி உள்ளனர்
ராமநாதபுரம்: நடுராத்திரி மாந்திரீக பூஜை நடந்துள்ளது.. வைரம், புதையல் எடுப்பதாக சொல்லி சித்து வேலைகளில் ஈடுபட்ட மந்திரவாதி உட்பட ஒரு டுபாக்கூர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள பேரையூர் அருகில் உள்ளது ஆனையூர்... இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகாதேவனும் சேர்ந்து ஏனாதியில் உள்ள முத்து என்ற பெண் சாமியாரிடம் குறிபார்க்கச் சென்றுள்ளனர்.
பெண் சாமியாரோ, இவர்களிடம் "உன் வீட்டருகே புதையல் உள்ளது. அதை நான் எடுத்து தருகிறேன். அதற்கு ரூ.30,000 செலவாகும்'' என்றார்... இந்த தொகையை கேட்டு அதிர்ந்த இருவரும் திரும்பி வந்துவிட்டனர்.. ஆனால் மகாதேவனுக்கு அந்த புதையல் மீது ஆசை எழுந்தது.. அதனால் தோப்படைபட்டியைச் சேர்ந்த விஏஓ செல்லப்பாண்டியனிடம் இதை பற்றி சொன்னார் மகாதேவன்.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த மாந்திரீகம் செய்யும் செல்வகுமாரை தேடி இவர்கள் வந்தனர்.. செல்வகுமாருக்கு 38 வயதாகிறது.. இதற்காக தன்னுடைய வீட்டிலேயே சிறியதாக ஒரு கோயிலையும் அமைத்து பூஜை, புனஸ்காரம் என ஊர் மக்களை நம்ப வைத்து வந்துள்ளார்.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ராத்திரி நேரம் ஆகிவிட்டால் இவர் குறி சொல்வார்.. இப்படி குறி சொல்வதில்தான் இவர் ஃபேமஸ் ஆகி உள்ளார்.. இதைதவிர, பில்லி, சூனியங்களையும் எடுப்பவராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்டுதான் விஏஓ செல்லப்பாண்டி அவரது 4 நண்பர்களும் சென்றனர்.
விவரத்தை கேட்ட மந்திரவாதி, "ஆமா.. அங்கே தங்கப் புதையல் ஒன்னு இருக்கு, அந்த இடம் தனக்கு தெரியும்.. ஆனையூரில் தான் அந்த தங்க கட்டிகள் உள்ளன.. தங்க சிலைகளும், வைரகற்களும்கூட அங்கேதான் இருக்கின்றன என்று கலர் கலராக சொன்னார். இவ்வளவையும் சொல்லிவிட்டு, அந்த வைரம், தங்க புதையல் கிடைக்க வேண்டும் என்றால் 4 பேரும் ஆளுக்கு 50 லட்சம் அதாவது மொத்தம் 2 கோடி தனக்கு காணிக்கை வேண்டும் என்று கேட்டுள்ளார் செல்வகுமார்.
இந்த தொகையை கேட்டதும் 5 பேருக்கும் தூக்கி வாரிப்போட்டது.. மந்திரவாதி சொன்னதை அப்படியே நம்பினாலும், அவர் கேட்ட பணத்தை தர 4 பேருக்கும் மனசே வரவில்லை.. தொகையை கொஞ்சம் குறைத்து கொள்ளும்படி கேட்டும், மந்திரவாதி கறார் காட்டினார்.. அதனால் 4 பேரும் சேர்ந்து மந்திரவாதிக்கு தெரியாமலேயே அந்த புதையலை எடுக்க முடிவு செய்தனர்.
அதற்காக ஒரு சூப்பர் பிளான் போட்டனர்... மந்திரவாதி தங்க, வைர புதையலை மறைத்து வைத்துள்ளார் என்று மாவட்ட எஸ்பிக்கு செல்போனில் தகவலை சொல்லினர்.. பிறகு அந்த செல்போனையும் ஸ்விட்ஆச் செய்து தூக்கி போட்டுவிட்டனர்.. போலீசாரும் ஒரு தனிப்படை அமைத்தனர்.. குறி கேட்பதுபோல சாமியாரிடம் போலீசாரே மாறுவேடத்தில் சென்றனர்.
வந்திருப்பது நம்ம போலீஸ் என்று தெரியாமல் அவர்களிடமும் அதே புதையல், அதே தங்கம், அதே வைரம், என ஒன்றுவிடாமல் மந்திரவாதி சொல்ல... கையும் களவுமாக கோழி அமுக்குவது போல பிடித்து செல்வகுமாரை போலீசார் பிடித்தனர்.. விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்ததும்தான், அப்படி ஒரு புதையலே இல்லை என்று தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் சிக்கியது மந்திரவாதி மட்டுமல்ல.. வான்டட்-ஆக போனை போட்டு போலீசுக்கு புகார் சொன்ன விஏஓ செல்லப்பாண்டி, முத்து, மகாதேவன், அருள் ஆகியோர் கைதாகி உள்ளனர். ராத்திரி நேரங்களில் மாந்திரீகம் செய்ய வைத்திருந்த மண்டை ஓடுகள், சிலைகளை கைப்பற்றிய போலீசார் 5 பேரையும் தூக்கி ஜெயிலில் வைத்துள்ளது.