ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி... 24 மணி நேரமும் கண்காணிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் குண்டுவெடிப்பில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதியின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்க்கொழும்பில் உள்ள செபஸ்தியார் தேவாலயத்துக்கு முதுகில் பையுடன் தீவிரவாதி வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
மேலும், விமானநிலையம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 6 அடி பைப் வெடிகுண்டு செயலிழக்கப்பட்ட நிலையில், 27 பேரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் 3 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் தகராறு செய்த மகன்.. ஆத்திரத்தில் கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய குடும்பம்
இந்தநிலையில், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு , மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், ஆழம் குறைந்த பகுதியான ராமேஸ்வரம்- தனுஷ்கோடி பகுதியில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படை, கடலோர காவல்படை உள்ளிட்ட அனைவரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீரிலும், நிலத்திலும் பயணிக்கும் ஹோவர் கிராஃப்ட் கப்பல் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பாக்வே மற்றும் மன்னார் கடல் பகுதிகள், சர்வதேச எல்லைகள் என பல்வேறு வகையிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல், சென்னை, திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.