ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில் கருவறைக்குள் சிறப்பு பூஜை.. தடுத்து நிறுத்தப்பட்டார் ஸ்ரீவிஜயேந்திரர்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை கருவறைக்குள் செல்ல விடாமல் அர்ச்சகர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட வாக்கு வாதத்திற்கு பின்னர் மூலவருக்கு அர்ச்சனை செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video
காஞ்சி காமகோடி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த இரு தினங்களுக்கு முன் இராமேஸ்வரம் வந்திருந்தார். காஞ்சி சங்கர மடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளில் ஈடுபட்ட அவர் இன்று காலை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார்.
வரவேற்பு
அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தர்காரும் இணை ஆணையரும் பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்று அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர். இந்நிலையில் சுவாமி சன்னதிக்கு சென்ற விஜயேந்திரர் பூஜை செய்வதற்காக கருவறைக்கு செல்ல முயன்றார்.
பேச்சுவார்த்தை
அப்போது ஏற்கனவே கருவறைக்குள் இருந்த அர்ச்சகர்கள் அவரை கருவறைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதன் பின் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. அப்போது அங்கிருந்த அமைச்சர் ஓஎஸ் மணியன் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர்கள் இரு தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திரை
இதையடுத்து விஜயேந்திரர் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் சிறப்பு தீபாராதனை செய்தார். இந்த பூஜையை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக திரை போட்டு மறைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்தோர் திரையை அகற்றுமாறு கோஷமிட்டனர்.
தங்கக் காசு மாலை
ராமேஸ்வரம் கோவிலுக்கு தங்கக்காசு மாலை, தங்கச்சங்கிலி, வில்வமாலை மற்றும் 11 வெள்ளிகுடங்கள், 2 வெள்ளி வாளி, தீப ஆரத்தி பொருட்களை விஜயேந்திரர் வழங்கினார். பின்னர் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு பகல் 12.15 மணி அளவில் விஜயேந்திரர் அங்கிருந்து சென்றார்.