இலங்கை கடற்படையால் 30 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு- டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் 30 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராமேஸ்வரம், கோட்டைபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 5 விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க அந்த நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன. இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மேலும் 30 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.