இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்
ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சேசு என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். மேலும் 3,000-க்கும் மேற்ப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர்.
ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் படகுகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் மீனவர் ஜேசுவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. சக மீனவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் துப்பாக்கியை காட்டி மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்ததோடு பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.
இதனால் படகு ஒன்றிற்கு ரூ 30ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவு முதல் கரை திரும்பியதாக வேதனை தெரிவித்தனர். தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 5 படகுகளுடன் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர் மரணமடைந்தார்.
அண்மைக்காலமாக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வந்தது இலங்கை கடற்படை. தற்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.