நான்தான்டா ஆத்தா.. 8 வருடமாக பூட்டி கிடந்த கோவில்.. திறக்க வந்த தாசில்தார்.. சாமியாடியதால் பரபரப்பு!
பூட்டிக்கடந்த கோவிலை திறக்க வந்த தாசில்தார் சாமியாடினார்
ராமநாதபுரம்: 8 வருஷமா பூட்டி கிடந்த கோவிலை திறக்க வந்த தாசில்தாருக்கு திடீரென சாமி வந்துவிட்டது. அதனால் பொதுமக்கள் முன்னிலையிலேயே சாமியாடினார்.
ராமநாதபுரம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு திருவடி அய்யனார் கோவில் புரவி எடுப்பு, உய்யவந்தம்மன் முளைப்பாரி திருவிழா போன்றவை ரொம்ப பிரபலம்.
கடந்த 300 வருஷங்களாகவே இந்த திருவிழா நடந்து வருகிறது. ஆனால், 2012-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முன்பகை காரணமாக திருவிழா நடத்தாமல் நிறுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, கோவிலும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் கடந்த 8 வருஷங்களாக திருவிழா நடக்கவே இல்லை.
இந்நிலையில், இந்த திருவிழாவை நடத்துவதற்கு கிராம மக்கள் கூட்டம் போட்டு, புரட்டாசி மாசத்தில் திருவிழாவை நடத்தி அமர்க்களப்படுத்தி விட வேண்டும் என்று தீர்மானம் போட்டனர். ஆனால் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, மதுரை ஐகோர்ட்டில் அமமுக சாயல்குடி ஒன்றிய செயலாளர் பச்சைக்கண்ணு மனு செய்தார். ஆனால் இந்த மனு நிராகரிக்கப்பட்டு, திருவிழா நடத்த அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து, கிராம மக்கள், அதனை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் விழா கமிட்டியாளர்கள் உய்யவந்தம்மன் கோவில் முளைக்கொட்டு வாசலை திறந்து வைக்க கடலாடி தாசில்தார் முத்துக்குமாரிடமும், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் ஆகியோரிடமும் மனு அளித்தனர்.
திருமலையில பிரம்மோற்சவம்: பூலோக வைகுண்டமாக மின்னும் ஏழுமலையான் கோவில்
இந்த மனுவை ஏற்று, கடலாடி தாசில்தார் முத்துக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் கோவிலை திறந்தனர். ஆனால் கோவிலை திறக்கும் சமயத்தில், தாசில்தாருக்கு திடீரென சாமி வந்துவிட்டது. அம்மன் அருள் வந்து பொதுமக்கள் முன்னிலையிலேயே சாமியாடினார். இதை பார்த்த ஊர் மக்களும் பரவசமாகி விட்டனர். திருவிழா நடக்கும் சந்தோஷத்தில் இருந்த மக்களுக்கு தாசில்தார் சாமியாடியது மேலும் உற்சாகத்தை தந்துவிட்டது.