சசிகலாவுடன் போனில் பேசியவருக்கு நள்ளிரவில் நடந்த ஷாக்.. பற்றி எரிந்த கார்.. வீடு புகுந்த 2 பேர்!
ராமநாதபுரம்: அதிமுக தலைமையை விமர்சித்து சசிகலா உடன் போனில் பேசியவரின் கார், நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தேர்தலுக்கு முன்பு அறிவித்த சசிகலா,தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் அதிமுக தொண்டர்களிடம் பேச தொடங்கி உள்ளார்கள நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் பக்கம் இருப்பதால் தொண்டர்களை தன்வசப்படுத்த முயன்று வருகிறார்.
தினசரி சசிகலா பலரும் தொலைப்பேசியில் பேசும் ஆடியோக்கள் வைரலாகி வருகின்றன. சசிகலா கொரோனா தொற்று குறைந்த பின்னர் மிகப்பெரிய அளவில் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை கைப்பற்ற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன்படியே அதிமுக தொண்டர்களிடம் நம்பிக்கையும், உறுதியும் அளித்து வருகிறார்.
செல்போனில் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜா. அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடன், சசிகலா செல்போனில் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலானதையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்தது,
போலீசார் வருகை
இதனிடையே பரமக்குடி அருகே காவனூரில் உள்ள தனது தார் பிளான்ட்டில் வின்சென்ட் ராஜா நேற்று முன்தினம் தங்கினார். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், வெளியே வராமல் சிசிடிவி கேமராக்களை பார்த்தார். அப்போது வெளியில் நிறுத்தியிருந்த தனது கார் தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு கொடுத்தார்.
போலீசார் விசாரணை
போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். இதேபோல் தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வந்து காரில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.அதில் இரு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து, காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பதிவாகி இருந்தது. அதன்படி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பயப்படமாட்டோம்
இது தொடர்பாக வின்சென்ட் ராஜா கூறுகையில், ''நான் சசிகலாவுடன் செல்போனில் பேசியபின்னர் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. தற்போது நேரடியாக என்னை கொலை செய்ய திட்டமிட்டு இங்கு வந்திருககிறார்கள். வெளியில் நிறுத்தியிருந்த காரில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டார்கள். அதிமுக தலைமை மற்றும் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோரை விமர்சனம் செய்தேன். இதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் காரை எரித்துள்ளார்கள். எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் இறுதியில் அதிமுக சசிகலா கைக்குள் தான் செல்லும். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்" என்றார்.