புரெவி புயல் சேதங்களை மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது... எந்தெந்த மாவட்டங்களில் எனத் தெரியுமா..?
ராமநாதபுரம்: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புரேவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு இன்று நேரில் ஆய்வு செய்யவுள்ளது.
ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அந்தக் குழு புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை கணக்கெடுக்க உள்ளது.
ஏற்கனவே வந்த மத்தியக் குழு நிவர் புயல் சேத விவரங்களை மட்டும் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்தது.
இதனிடையே மத்திய குழுவின் தமிழக சுற்றுப்பயண விவரம் பின்வருமாறு;
மத்தியக் குழு
இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வை தொடங்கிய மத்திய குழு காலை 8.30 மணிக்கு மண்டபம், பாம்பன் பகுதிகளுக்கு சென்று சேதமான படகுகளை ஆய்வு செய்கிறது.
அதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் இந்தக் குழு, நண்பகல் 12.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடியை சென்றடைகிறது.
பயிர்கள் சேதம்
அங்கு நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை புயலால் சேதமான பயிர்களை ஆய்வு செய்கிறது.
பின்னர் உணவு இடைவேளையை முடித்துக்கொண்டு 2 மணிக்கு ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணியளவில் மயிலாடுதுறை செல்கிறது.
மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை கொள்ளிடம் கரையோரம் விளைபயிர்கள் சேதமானது குறித்து ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் செல்கிறது.
சிதம்பரத்தில் மாலை 6.30 மணி வரை ஆய்வு செய்யும் மத்திய குழு இன்றிரவு நாகை செல்கிறது.
நாளை தஞ்சை
நாகையில் இன்றிரவு தங்கும் மத்தியக் குழு நாளை காலை கீழையூர் மற்றும் கீழ் வேளூர் பகுதிகளில் புரேவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுகிறது.
அதன் பின்னர் திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்கிறது.
பயன்பெறுங்கள்
பின்னர் அங்கிருந்து நாளை மாலை 5.30 மணிக்கு திருச்சி செல்லும் மத்திய குழுவினர் அங்கிருந்து டெல்லிக்கு செல்கின்றனர்.
எனவே, மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், விவசாயிகளும் மத்திய குழுவினரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் முன் வைத்து பயன்பெறலாம்.