EXCLUSIVE: கட்சி கொடி, பேனர் இதெல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.. ஒரு கட் அண்ட் ரைட் அதிரடி கிராமம்!
கட்சி, கொடி, பேனர் வைக்க கூடாது என கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது ஒரு கிராமம்
ராமநாதபுரம்: "பிரச்சாரம் பண்ண வந்தா அதை மட்டும் பண்ணிட்டு பேசாம போயிடணும், கட்சி கொடி, பேனர் இதெல்லாம் இங்க தூக்கிட்டு வரக்கூடாது" என்று கட் அன்ட் ரைட்டாக சொல்கிறது ஒரு கிராமமே!
பனி இல்லாத மார்கழியா.. கட்சி கொடி இல்லாத தேர்தலா... அப்படித்தான் இவ்வளவு காலம் நாம் பார்த்து வந்துள்ளோம். ஆனால் விசித்திரமாக நமக்கு தெரிந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை அருகில் உள்ளது ஆலங்குளம். இந்த ஊரில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறார்கள். இன்ன சாதி, இன்ன மதம் என்று குறிப்பிட்டு இங்கு இல்லை. எல்லோருமே கலந்துள்ளனர். ஒரு வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் சரி, எல்லா மதம், சமூகத்தினரும் கலந்து கொள்வார்கள். அப்படி ஒரு ஒற்றுமை!
இந்த ஒற்றுமை கெட்டு விடக்கூடாது என்பதற்காகவும், சமூக ஒற்றுமையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் சில கட்டுப்பாடுகளை இந்த ஊர் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டோம். அந்த கண்டிஷன்கள் என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக சென்றோம்.
அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரவேல் அவர்களிடத்தில் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக வந்திருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தி கொண்டு ஊர் கட்டுப்பாடுகள் குறித்து கேட்டோம்.
கேள்வி: உங்க ஊர்ல நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறதா சொல்றாங்களே.. அதெல்லாம் என்னென்ன?
கட்சி கொடி, பேனர், போஸ்டர்கள், சாதி, மதபெயர் பலகை இப்படி எதுவுமே இருக்கக்கூடாது என்பதுதான் எங்க ஊர் கட்டுப்பாடு.
கேள்வி: எதுக்காக இப்படி ஒரு கட்டுப்பாடு வெச்சிருக்கீங்க..?
எங்கள் கிராமத்தின் ஒற்றுமைதான் எங்களுக்கு முக்கியம். எந்த விஷயத்தில் பிரச்சனை வெடிக்கும், சர்ச்சையாகும் என தெரிகிறதோ அதை அறவே தவிர்த்து விடுவோம். அது அரசியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி.
கேள்வி: இது எலக்ஷன் சமயம் ஆச்சே.. ஊருக்குள்ள எப்படி பிரச்சாரம் பண்ணாம இருக்க முடியும்?
இல்லை.. இல்லை.. கிராமத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியிலும் இருக்கலாம். அது அவர்களின் உரிமை. எங்கள் கிராமத்துக்கு அரசியல்வாதிகள் வரலாம். பிரச்சாரம் செய்யலாம். அப்படி பிரச்சாரத்திற்காக வருபவர்கள் ஸ்பீக்கர்கள் கட்டி கொள்ளலாம். பிரச்சாரம் முடிந்ததும் அந்த ஸ்பீக்கர்களை அவிழ்த்து கொண்டு போய்விட வேண்டும். ஆனால் நாங்கள் ஸ்பீக்கர்கள் எப்பவுமே வெக்க மாட்டோம். அதே மாதிரி எந்த அரசியல் கட்சி தலைவர்களின் பேனர், போஸ்டர்களும் இங்க இருக்காது. சாதி, மத, பெயர் பலகைகளும் நாங்க வைக்க மாட்டோம்.
கேள்வி: சினிமா நடிகர்களுக்கு பேனர் வைப்பதிலும் இதே முறைதானா?
ஆமாம். அஜித், விஜய் என்று எந்த நடிகருக்கும் பேனர், போஸ்டர், கட்-அவுட் வைக்க மாட்டோம். எங்க வீட்ல நடக்கும் விசேஷங்களுக்கு பிளக்ஸ் போர்டு வைப்போம். அதைகூட விசேஷம் அன்னைக்குத்தான் வைப்போம். முடிஞ்சதும் எடுத்துடுவோம். ஆனால் அந்த போர்டில் எந்த அரசியல்வாதி, சினிமா நடிகர்கள் போட்டோ இருக்காது. விசேஷ வீட்டு ஆளுங்கதான் அந்தபேனர்ல இருப்பாங்க.
கேள்வி: இது உங்களுக்கு எப்படி சாத்தியமாகுது? எந்தஅளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்குது?
இதை யாரும் கண்டிஷன் போட்டு திணிக்கறது இல்லை. இப்படியே நாங்க 30 வருஷமா பழகிட்டோம். இப்படி இருக்கிறதால எங்களுக்குள்ள இதுவரைக்கும் ஒரு பிரச்சனையும் வந்ததில்லை. எல்லோருமே ஒத்துமையா இருக்கோம். குறிப்பாக சாதி, மத பிரச்சனை வந்ததே இல்லை. சமூக ஒற்றுமை இன்னும் எங்களுக்குள்ள இருக்கிறது பெருமையா இருக்கு" என்று சொல்லி முடித்தார்.
இப்படி ஒரு கிராமமா என்று ஆச்சரியப்பட்டபோது, மற்றொரு விஷயம் காதில் வந்துவிழ அதைவிட ஆச்சரியமாக போய்விட்டது. இவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமம்தான் ஒரு எம்எல்ஏவையே உருவாக்கி இருக்கிறதாம். அவர் பெயர் மாணிக்கம். மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருக்கிறாராம். இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், ஓட்டுகேட்கும்போதும் சரி, பிரச்சாரம் செய்யும் போதும் சரி, அவருக்கும் இங்கே இதே கண்டிஷன்தானாம்!