ராமேஸ்வரத்தில் முகாமிட்டுள்ள விஜயகாந்த்... குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள 'திலஹோமம்'
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் நடைபெறும் திலஹோமத்தில் பங்கேற்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமது குடும்பத்தினருடன் அங்கு முகாமிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் உள்ள தேமுதிக நிர்வாகி ஒருவரது இல்லத்தில் வைத்து இந்த திலஹோமம் நடத்தப்படுகிறது.
விஜயகாந்த் உடல்நலத்துடன் இருப்பதற்காகவும் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகவும் திலஹோமம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏக குஷியில் எ.வ.வேலு... ஆரவாரமின்றி நடந்த அருணை மருத்துவக்கல்லூரி திறப்பு விழா..!
திலஹோமம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்து வரும் சூழலில் அவரது ஆரோக்கியத்திற்காக திலஹோமம் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். ராமேஸ்வரம், சேதுகரை, போன்ற இடங்களில் தான் இந்த ஹோமம் நடத்துவது சிறந்தது என்ற ஐதீகம் உள்ளதால் ராமேஸ்வரத்தில் வைத்து ஹோமம் நடத்த திட்டமிட்டார் பிரேமலதா. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மூலம் முன்கூட்டியே தயார் செய்து வைத்தார்.
ஊழியர் திருமணம்
இந்நிலையில் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் செந்தில் என்ற ஊழியரின் திருமணம் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக வந்த பிரேமலதா தன்னுடன் விஜயகாந்த் மற்றும் இரண்டு மகன்களையும் அழைத்து வந்திருந்தார். திருமண விழாவில் பிரேமலதாவும் அவரது மூத்த மகன் விஜயபிரபாகரனும் மட்டும் கலந்துகொண்ட நிலையில் விஜயகாந்தும் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ராமேஸ்வரம் சென்றுவிட்டனர்.
இன்று ஹோமம்
விஜயகாந்த் ராமேஸ்வரம் வந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தேமுதிக நிர்வாகி ஒருவரது இல்லத்திற்கு பெருமளவில் வேத விற்பனர்கள் சென்றதை அடுத்து விஜயகாந்த் ராமேஸ்வரம் வந்திருப்பதும் அவருக்காக திலஹோமம் நடைபெற இருப்பதும் தெரிய வந்தது. இதனிடையே இந்த ஹோமத்தில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
3 முறை திலஹோமம்
திலஹோமத்தை பொறுத்தவரை திருமணத்தடைகளை நீக்கக்கூடியது எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விஜயகாந்தின் மகன்களும் அதில் கலந்துகொள்வதாகவும் இந்த ஹோமம் 3 முறை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் இரண்டு முறை விஜயகாந்த் தில ஹோமத்திற்காக ராமேஸ்வரம் வருவாரா அல்லது இன்னும் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கி 3 முறை திலஹோமத்தை நடத்திவிட்டு புறப்படுவாரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.