முரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி? தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி திருப்பி அனுப்பியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை மற்றும் வேலை நிறுத்தங்களால் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். பின்னர் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு நேற்று மீன்பிடிக்க சென்றனர்.
துப்பாக்கி முனையில் மிரட்டல்
கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியது. மேலும் வானை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மீன்பிடிக்காமல் உயிர் தப்பினால் போதும் என மீனவர்கள் கரைக்குத் திரும்பிவிட்டனர். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
முரளிதரன் பட விவகாரத்தால் மிரட்டல்?
இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களை அண்மைக்காலமாக நிறுத்தி இருந்தது. இப்போது திடீரென மீண்டும் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை இறங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதனால்தான் இலங்கை ராணுவம் மீண்டும் அத்துமீறலை காட்டத் தொடங்கியிருக்கிறதா? என்பதும் கேள்வி.
இலங்கை கடற்படை இப்படித்தான்
ஏனெனில் இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தால் இதேபோல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை குறிவைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தோற்றால் கூட தமிழக மீனவர்களை தாக்கி ஆத்திரத்தை காட்டுவதும் இலங்கை கடற்படையின் வாடிக்கை. இதனால்தான் முத்தையா முரளிதரன் பட விவகாரத்தால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மிரட்டியிருக்கலாம் என்கின்றனர் மீனவர்கள்.
|
ராமதாஸ் கடும் கண்டனம்
இலங்கை ராணுவத்தின் இந்த அடாவடித்தனத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலால் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது! தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினர் அத்துமீறல் சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் நிம்மதியாக மீன் பிடிப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்!. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.