வைட்டமின் "ப" வை நம்பி அதிமுக.. கரை சேருமா திமுக.. எடுபடாத அமமுக.. பரமக்குடியில் வெல்வது யார்?
பரமக்குடியில் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: இப்போதைக்கு குத்துமதிப்பாக கூட பரமக்குடி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வதற்கு இல்லையாம்! காரணம்... தொகுதி நிலவரம் அப்படி இருக்கிறது!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்று பரமக்குடி (தனி) தொகுதி. மாவட்டத்தில் உள்ள ஒரே தனித் தொகுதி.
பரமக்குடி தொகுதி என்பது விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து சாதியினரும், மதத்தினரும் நிறைந்த பகுதி. விவசாயத்துக்குதான் முதலிடம். இருந்தாலும் நெசவாளர்கள், மற்றும் வாக்குகளே இந்த தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவையாக எப்பவுமே இருக்கிறது.
எஸ். முத்தையா
1952 முதல் 2011 வரை 14 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 3 முறை, சுயேட்சை ஒரு முறை, திமுக 3 முறை, அதிமுக 6, தமாகா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 2016-ல் அதிமுக சார்பில் டாக்டர் எஸ். முத்தையா வசம் சென்றது.
சதன் பிரபாகர்
இப்போது விரைவில் இங்கு இடைத்தேர்தல் வரஉள்ளது. அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் சதன் பிரபாகர். இவருக்கும் இந்த தொகுதிக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் சிபாரிசால் இவர் வேட்பாளர் ஆனார் என்று சொல்லப்படுகிறது.
நிலக்கோட்டை.. தக்க வைப்பாரா தங்கதுரை.. தட்டி பறிப்பாரா தேன்மொழி.. அப்ப சவுந்தரபாண்டியனுக்கு?
வைட்டமின் 'ப'
மேலும் இவரது அப்பா முன்னாள் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர். பெயர் நிறைகுளத்தான். ஆனால் இந்த தொகுதி இவருக்கு புதுசுதான். தேர்தல் அனுபவம் கொஞ்சம் இல்லாதவர். அதனால் உள்ளூர் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளரிடம் இவர் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இப்போதைக்கு இவரது பலம் வைட்டமின் "ப" மட்டுமே என்று சொல்லப்படுகிறது.
பெரிய மைனஸ்
அதேபோல, அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் முத்தையாவுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. என்னதான் வளைச்சு வளைச்சு பிரச்சாரம் செய்தாலும் தொகுதி மக்கள் மத்தியில் இவரது பிரச்சாரம் எடுபடவில்லை என்று தெரிகிறது. இதற்கு காரணம், இவர் தொகுதி பக்கம் அன்று முதல் எட்டிப் பார்க்காததுதான் என்கிறார்கள். இதை தவிர கட்சிக்காரர்களை அரவணைத்து செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது இப்போதைக்கு பெரிய மைனசாக இருக்கிறது.
எடுபடவில்லை
திமுக சார்பிலோ சம்பத்குமார் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் புதியவர்தான். தேர்தல் அனுபவமும் இல்லை. தொகுதி மக்களிடம் பிரச்சாரமும் எடுபடவில்லையாம். எனினும் இப்போதைக்கு கூட்டணி பலம், மற்றும் அதிமுக-பாஜக அரசுகளின் மீதான அதிருப்தி போன்றவை இவருக்கு சாதமாக இருக்கிறது. இருந்தாலும் திமுக கட்சிக்குள் உள்ள உட்பூசல்களால் எந்த மாதிரியான உள்குத்து நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறுகிறார்கள்.
யாருக்கு வெற்றி?
அதனால் இப்போதுள்ள சூழ்நிலையில் பரமக்குடி தொகுதியை பொறுத்தவரை, இறுதி நேர பணப் பட்டுவாடாவை பொறுத்தே வெற்றி கோட்டினை யார் தொடுவார்கள் என்று தெரியவரும். பார்ப்போம்!!