நான் நிறைய கற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றி ராமநாதபுரம்.. வருண்குமார் ஐபிஎஸ் போட்ட பரபர ட்விட்
ராமநாதபுரம்: மிக்க நன்றி ராமநாதபுரம்.. நான் நிறைய கற்றுக்கொண்டேன். காவல் துறையில், என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள் இவை.. என ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட வருண்குமார் எஸ்பி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கடந்த 31ம் தேதி ராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் எனும் 24 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மதவாதக் காரணம் இருப்பதாகக் தகவல்கள் பரவியது. இதை மறுத்து ராமநாதபுரம் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.
அதில், "இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது.. அரசுக்கு பஸ் உரிமையாளர்கள் வைத்த 5 கோரிக்கை
சென்னைக்கு இடமாற்றம்
இந்த பதிவை பகிர்ந்து, வதந்திகளையும் பொய்களையும் நம்ப வேண்டாம் என வருண்குமார் ஐபிஎஸ் பதிவிட்டதற்கு மறுநாளே அவர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், சென்னையில் கணிணி பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
தாத்தா குறித்த பதிவு
இந்நிலையில் வருண்குமார் ஐபிஎஸ் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 3 தேதி ராமநாதபுரத்திற்கு எஸ்பியாக வந்த போது ஒருட்விட் பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டில் என் தாத்தா ராமலிங்கம் ராமநாதபுரத்தில் தபால்காரராக பணிபுரிந்தார். என் தந்தை வீரசேகரன் ராமநாதபுரத்தில் பிறந்து, ஸ்வார்ட்ஸ் பள்ளியில் பயின்றார். இன்று, ராமநாதபுரம் SP-ஆக என்னை நியமித்ததில், நானும் என் தந்தையும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!" என்று கூறியிருந்தார்.
நன்றி ராமநாதபுரம்
அந்த ட்விட்டை ரீடுவிட் செய்து அதன் மேல் மிக்க நன்றி ராமநாதபுரம்.. நான் நிறைய கற்றுக்கொண்டேன். காவல் துறையில், என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள் இவை. எனது குடும்பம் இங்கு இருப்பதால் சென்னைக்கு திரும்பி வருவதில் மகிழ்ச்சி. அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இணைந்திருங்கள், தொடர்பில் இருங்கள்..." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நீங்கா இடம்பிடிப்பு
இந்த ட்விட்டை பகிர்ந்து மக்கள் பலர் தங்கள் பதிவில் , எஸ்பி வருண்குமாரை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். மண்ணின் மைந்தனாக பழகுவதற்கு இனிமையான எளிய மனிதராக அனைவரிடத்திலும் பண்பாக பழகி தங்களது பணியை சிறப்பாக செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டதாக டுவிட்டர்வாசி ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்